சிங்கப்பூர், அடுத்த மாதம் கொவிட்-19 கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவதற்கான சாத்தியம் குறைவு என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் சனிக்கிழமை (நவம்பர் 20) தெரிவித்துள்ளார்.
அனைத்தும் சுமுகமாக நடந்தால், டிசம்பர் இறுதிவாக்கில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் பரிசீலிக்கும் என்று அவர் கூறினார்.
கிருமித்தொற்றை எதிர்கொள்வதில் அரசாங்கம் கடைப்பிடித்துவரும் படிப்படியான அணுகுமுறையின் ஒரு பகுதியாக இது அமைகிறது.
வேலையிடங்களுக்குத் திரும்ப ஊழியர்களை அனுமதிப்பதன் தொடர்பில் மற்ற சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டாலும், சிங்கப்பூர் தற்போது ஓர் அம்சத்தில் மட்டும் கவனம் செலுத்தி வருவதாக திரு வோங் சொன்னார்.
"மற்ற கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதை இப்போதைக்கு நாங்கள் நிறுத்திவைக்கிறோம். அடுத்த சில வாரங்களுக்கு நிலவரத்தை நாங்கள் கண்காணிப்போம். ஒட்டுமொத்த நிலவரமும் சுகாதாரப் பராமரிப்பு முறையும் தொடர்ந்து சீராக இருக்கும் பட்சத்தில், டிசம்பர் இறுதிவாக்கில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நாங்கள் பரிசீலிப்போம்," என்றார் அவர்.


