மெல்பர்ன்: சிங்கப்பூரிலிருந்து நேற்று அனைத்துலக மாணவர்கள் சிலர் மெல்பர்ன் சென்றுள்ளனர். கொவிட்-19 பரவலால் ஆஸ்திரேலியா கடந்தாண்டு தொடக்கத்தில் அதன் எல்லைகளை மூடியதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவுக்கு சிங்கப்பூர் மாணவர்கள் செல்வது தடைபட்டுப் போனது.
ஆனால் சிங்கப்பூருக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே விமானம் வழி தடுப்பூசிப் பயணத் தடம் திட்டம் நடப்புக்கு வந்ததைத் தொடர்ந்து, மெல்பர்னுக்கும் சிட்னிக்கும் நேற்று விமானப் பயணங்கள் தொடங்கின.
கடந்தாண்டு நவம்பரில் சிறிய எண்ணிக்கையிலான மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்ட பின்னர் இப்போதுதான் மாணவர்கள் சிலர் அங்கு சென்றடைந்துள்ளதாகக் கூறப்பட்டது. 39 ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்களைப் பிரதிநிதிக்கும் கூட்டமைப்பின் பேச்சாளர் கேட்ரியோனா ஜாக்சன் அதைக் கூறினார்.
இன்னும் அதிகமான மாணவர்களை ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கும் திட்டத்தை இது கோடிகாட்டுவதாக அவர் கூறினார்.