வாஷிங்டன்: அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலம், வாக்கிஷா நகரில் இடம்பெற்ற கிறிஸ்மஸ் பேரணியில் கார் புகுந்ததில் ஐவர் கொல்லப்பட்டனர்; 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
காரை ஓட்டியவர் கைது செய்யப்பட்டுவிட்டதாகவும் அவர் ஓட்டிச் சென்ற வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வாக்கிஷா நகரக் காவல்துறைத் தலைவர் டேன் தாம்ப்சன் தெரிவித்தார்.
“பேரணியில் சென்ற பலரையும் அவ்வாகனம் இடித்துச் சென்றது. அவர்களில் சிலர் குழந்தைகள். இச்சம்பவத்தில் ஒரு சில உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன,” என்றார் திரு தாம்ப்சன்.
ஆனாலும், குடும்பத்தினர்க்குத் தெரியப்படுத்துமுன் எத்தனை பேர் இறந்துவிட்டனர் என்பதைச் சொல்ல முடியாது என்று முதலில் அவர் சொன்னார்.
அத்துடன், இச்சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதா எனத் தெரிவியவில்லை என்றும் அவர் கூறினார்.
இச்சம்பவம் உள்ளூர் நேரப்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.39 மணிக்கு நிகழ்ந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
பேரணியாகச் சென்றோர்மீது மோதியபோது அந்த வாகனம் கிட்டத்தட்ட 40 மைல் (64 கிலோமீட்டர்) வேகத்தில் சென்றதாக சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் சொன்னார்.