சிட்னி: ஆஸ்திரேலியாவில் வரும் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் அனைத்துலக எல்லை கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக சென்ற ஆண்டு மே மாதம் தனது அனைத்துலக எல்லையை மூடியது ஆஸ்திரே லியா.
தற்போது அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதால், ஆஸ்திரேலிய குடியுரிமை வைத்திருப்பவர்களின் வெளிநாட்டு குடும்ப உறுப்பினர்கள் ஆஸ்திரேலியா செல்ல சில வாரங்களுக்கு முன்பு அனுமதி வழங்கப்பட்டது.
இதன் அடுத்தகட்டமாக தடுப்பூசி போட்டுக்கொண்ட மாணவர்கள், ஊழியர்கள் உட்பட ஆஸ்திரேலிய விசா வைத்திருப்பவர்கள் வரும் டிசம்பர் 1ஆம் தேதி தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று மோரிசன் கூறியுள்ளார்.
மேலும் அவர்கள் பயண விலக்கு கோரி விண்ணப்பிக்க வேண்டியது இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் அந்தந்த மாநிலங்களின் தனிமைப்படுத்தல் விதிகளுக்கு அவர்கள் உட்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
அத்துடன் வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் ஜப்பான், தென்
கொரியாவைச் சேர்ந்த தடுப்பூசி போட்டுக்கொண்ட சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கவுள்ளதாகவும் அவர் சொன்னார்.
இவ்வாண்டு இறுதிக்குள் இந்தப் பயணம் திட்டம் மேலும் பல நாடுகளுக்கு விரிவுப்படுத்தப்படும் என்றும் மோரிசன் கூறினார்.
சென்ற அக்டோபர் மாத இறுதி நிலவரப்படி, கிட்டத்தட்ட 160,000 மாணவர்கள் உட்பட 235,000க்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் ஆஸ்திரேலிய விசா வைத்திருப்பதாக அந்நாட்டு அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டு மாணவர்கள் மீண்டும் அனுமதிக்கப்படுவது ஆஸ்திரேலியக் கல்வித் துறைக்கும் பொருளாதாரத்திற்கும் பெரும் ஊக்கமாக இருக்கும். ஆஸ்திரேலிய பொருளாதாரத்திற்கு வெளிநாட்டு மாணவர்களால் ஆண்டுக்கு சுமார் 35 பில்லியன் வருவாய் கிடைக்கிறது.
அத்துடன் வெளிநாட்டு ஊழியர்களின் வருகை அங்குள்ள ஊழியர் பற்றாக்குறையை பெரிதும் தீர்க்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் 1,029 பேருக்கும் நியூசவுத் வேல்ஸில் 180 பேருக்கும் நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. மற்ற மாநிலங்களில் பெரும்பாலும் கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகவில்லை.