வெலிங்டன்: நியூசிலாந்தில் கிருமிப் பரவல் கட்டுப்பாடுகள் வரும் 3ஆம் தேதியோடு முடிவுக்கு வரவுள்ளதைத் தொடர்ந்து கிருமித்தொற்றுக்கு மத்தியில் வாழ்வதற்கான புதிய அணுகுமுறையைக் கடைபிடிக்க உள்ளதாக சொன்னார் அதன் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென்.
பெரும்பாலும் கிருமிப் பரவல் இல்லாத நாடாக விளங்கிய நியூசிலாந்தில் டெல்டா வகை கிருமிப் பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்தன.
எனவே கிருமிப் பரவலை முற்றிலும் துடைத்தொழிக்கும் உத்தியை கைவிட்டுவிட்டு, அதை நிரந்தரநோயாக கையாள முடிவெடுத்துள்ளார் ஜெசிந்தா.
எனவே புதிய அணுகுமுறையின்படி, கிருமிப் பரவல் நிலவரங்களின்படி மாநிலங்கள் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை ஆகிய நிறங்களின் கீழ் வகைப்படுத்தப்படும்.
அண்மைய கிருமிப் பரவலால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஆக்லாந்து நகரம், சிவப்பு நிறமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
ஆக்லாந்தில் கட்டுப்பாடுகள் சில தளர்த்தப்பட்டாலும், 90 நாட்களுக்கும் மேலாக முடக்கநிலையில் உள்ளது.
"டெல்டா வகை கிருமித்தொற்றை துடைத்தொழிக்க முடியவில்லை என்பது கடினமான உண்மை. ஆனால் அதிகமானோருக்குத் தடுப்பூசி, தடுப்பூசி அட்டை திட்டம் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் நாம் அதை சமாளிக்கத் தயாராக உள்ளோம்," என்றார் ஜெசிந்தா.
நியூசிலாந்தில் கிட்டத்தட்ட
83 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். 88 விழுக்காட்டினர் முதல்முறை தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
நியூசிலாந்தின் அனைத்துலக எல்லை எப்போது திறக்கப்படும் என்பது தெளிவாக தெரியவில்லை.
அண்டைநாடான ஆஸ்திரேலியாவுடன் சென்ற ஆகஸ்ட் மாதம் தனிமைப்படுத்தல் இல்லாத பயணத்தைத் தொடங்கிய நியூசிலாந்து, கிருமிப் பரவல் காரணமாக மீண்டும் அதை நிறுத்திவிட்டது.

