வியட்னாம்: இவ்வாண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி
ஹனோய்: வியட்னாமில் இவ்வாண்டு இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் வகையில் அதற்கான பணிகளை விரைவுபடுத்துமாறு அந்நாட்டு பிரதமர் பாம் மின் சின் கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கு தேவையான தடுப்பூசி தங்களிடம் கையிருப்பு உள்ளதாகவும் அவர் சொன்னார். முன்பு இவ்வாண்டு இறுதிக்குள் பாதி பேருக்குத் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. சென்ற வெள்ளிக்கிழமை நிலவரப்படி, வியட்னாமில் 53.4 விழுக்காட்டினர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
ஆப்கானில் பட்டினிச் சாவு அச்சம்
காபூல்: ஊட்டச்சத்துக் குறைவு, பட்டினி, வறுமை ஆகியவற்றால் ஆப்கானிஸ்தானில் சாவின் விளிம்பில் 10 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் இருப்பதாக யுனிசெஃப் கவலை தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் டோலோ சேனலுக்கு யுனிசெஃப்பின் மக்கள் நலக்குழுவின் தலைவர் சாம் மோர்ட் அளித்த பேட்டியில், "உலக குழந்தைகள் தினம் கொண்டாடுகிறோம். ஆனால், ஆப்கானில் கொண்டாட முடியாது, அங்கு குழந்தைகள் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. 14 மில்லியன் குழந்தைகள் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 மில்லியன் குழந்தைகளுக்கும் அதிகமானோர் ஊட்டச்சத்துக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில்
1 மில்லியனுக்கும் மேற்பட்ட குழந்தைகள் சாவின் பிடியில் இருக்கிறார்கள்," எனத் தெரிவித்தார்.
சீன, இந்திய தடுப்பூசிகளுக்கு பிரிட்டன் அங்கீகாரம்
லண்டன்: சீனா, இந்தியாவின் மேலும் சில தடுப்பூசிகளுக்கு பிரிட்டன் அங்கீகாரம் அளித்துள்ளது. இதன்படி சீனாவின் சினோவேக் பையோடெக், சினோபார்ம், இந்தியாவின் பாரத் பையோடெக் ஆகிய தடுப்பூசிகள் போட்டுக்கொண்டோரும் இனி பிரிட்டனுக்குச் செல்லலாம்.
இதையடுத்து, உலகச் சுகாதார நிறுவனம் அண்மையில் அனுமதி அளித்த கோவேக்சின் உட்பட அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்ட அனைத்து ஏழு கொவிட்-19 தடுப்பூசிகளையும் பிரிட்டன் அங்கீகரித்து
உள்ளது. உள்ளூர் தயாரிப்பு தடுப்பூசி போட்டுக்கொண்ட பல்லாயிரக்கணக்கான சீன மாணவர்கள் பிரிட்டன் செல்ல இந்த முடிவு வழி வகுக்கிறது.
பிரிட்டனில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இளங்கலை பயில இந்த ஆண்டு கிட்டத்தட்ட 4,500 சீன மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கிருமிப் பரவல் தொடங்கியதில் இருந்து இது மூன்றில் ஒரு பங்கு
அதிகரித்து உள்ளதாகக் கூறப்படுகிறது.

