தம்முடைய நிலத்தை மாசுபடுத்தியதாகக் கூறப்படும் வேதிப்பொருள் நிறுவனம் ஒன்றுக்கு எதிராக வழக்குத் தொடர, சீன விவசாயி ஒருவர் 16 ஆண்டுகள் சொந்தமாக சட்டக்கல்வியைப் பயின்றார்.
வாங் என்லின் எனும் அந்த ஆடவர், தொடக்கநிலை மூன்று வரை மட்டுமே பயின்றவர். ஆனால், சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான கிஹுவா குழுமத்துக்கு எதிராக தாம் தொடர்ந்த வழக்கின் முதல் நிலையை இவர் வென்றுள்ளார்.
நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக கிஹுவா குழுமம் மேல்முறையீடு செய்துள்ளது. எனினும், மாசுபட்ட தங்களது நிலத்தில் இனி பயிரிட முடியாததால், தமக்கும் தம் அண்டைவீட்டாருக்கும் நீதியைப் பெற்றுத் தருவதில் திரு வாங் வைராக்கியத்துடன் உள்ளார்.
சீனாவின் ஹெய்லோங்ஜியாங் மாநிலம், கிக்கிஹார் நகர்ப்புறப் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் 60 வயது மதிக்கத்தக்க திரு வாங் வசிக்கிறார்.
இவரால் 2001ஆம் ஆண்டை வாழ்விலேயே மறக்க முடியாது. கிஹுவா குழுமம் வெளியேற்றிய வேதிக் கழிவில் இவரது நிலம் அப்போது வெள்ளக்காடானது.
சீனப் புத்தாண்டுக்கு முந்திய நாள், தம் அண்டைவீட்டாருடன் சேர்ந்து திரு வாங் சீட்டு விளையாட்டு ஆடிக்கொண்டிருந்தார். திடீரென, அருகிலுள்ள கிஹுவா தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய கழிவுநீரால் தாங்கள் வசித்த வீடுகள்
வெள்ளக்காடானதைக் கண்டு அவர்கள் அதிர்ந்து போயினர்.
அந்தக் கிராமத்தில், விளைநிலத்தின் ஒரு பகுதியையும் கழிவுநீர் வெள்ளமாக்கியது.