ராணுவ ஆட்சியைக் கவிழ்க்க
8.6 மில்லியன் வெள்ளி நிதி திரட்டு
யங்கூன்: மியன்மாரில் ராணுவ ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில் தேசிய ஒற்றுமை அரசாங்கம் எனும் போட்டி அரசாங்கம் ஒரேநாளில் 6.3 மில்லியன் அமெரிக்க டாலர்
(8.6 மில்லியன் வெள்ளி) நிதி திரட்டியுள்ளது.
இதற்காக அவர்கள் தொடங்கிய பத்திர விற்பனையின் முதல் மூன்று மணி நேரத்தில் 3 மில்லியன் டாலருக்குப்
பத்திரங்கள் விற்றதாக போட்டி அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் சொன்னார்.
தங்களுக்கு இதற்கு வட்டி எதுவும் கிடைக்காது என்றாலும் ராணுவ ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு உதவும் நோக்கில், வெளிநாட்டில் வசிக்கும் மியன்மார் குடிமக்கள் பெரும்பாலோர் இப்பத்திரங்களை வாங்கியுள்ளனர்.
1 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி திரட்டுவது போட்டி அரசாங்கத்தின் இலக்காகும்.
'சீனாவுக்கு எதிரானவர்கள் பிரச்சினை ஏற்படுத்த முயல்கிறார்கள்'
பெய்ஜிங்: சீனாவுக்கு எதிரானவர்கள், பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் பிரச்சினையை ஏற்படுத்த முயல்வதாக சீனாவின் குளோபர் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.
சீனாவின் மனித உரிமை மீறல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அரசதந்திர ரீதியில் பெய்ஜிங் ஒலிம்பிக்கைப் புறக்கணிக்க திட்டமிட்டு வரும் அமெரிக்கா, பிரிட்டனைத் தொடர்ந்து தற்போது மனித உரிமைகள் குழுவும் புறக்கணிப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளதைத் தொடர்ந்து அந்நாளிதழ் இவ்வாறு கூறியுள்ளது.
இதனிடையே, சீன டென்னிஸ் வீராங்கனை சில நாட்கள் காணாமற்போயிருந்த விவகாரமும் உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா பதற்றத்தைத் தூண்டுவதாக குற்றம்சாட்டும் சீனா
வாஷிங்டன்: அமெரிக்கப் போர்க் கப்பல் மீண்டும் தைவான் நீரிணையைக் கடந்து சென்றுள்ளதைச் சாடிய சீனா, வட்டாரத்தில் அமெரிக்கா பதற்றத்தைத் தூண்ட முற்படுவதாகக் குற்றம்சாட்டியது.
அனைத்துலக சட்டங்களுக்கு உட்பட்டுத்தான், தனது போர்க்கப்பல் தைவான் நீரிணை வழியாகச் சென்றதாக அமெரிக்கக் கடற்படை தெரிவித்துள்ளது. மேலும் இது வழக்கமான நடவடிக்கைதான் என்றும் அது கூறியது.
தடையற்ற, வெளிப்படையான இந்தோ-பசிபிக் வட்டாரத்துக்குத் தான் கொண்டுள்ள கடப்பாட்டுக்குச் சான்றுதான் அந்த நடவடிக்கை என்று வாஷிங்டன் தெரிவித்தது.

