வாஷிங்டன்: அமெரிக்காவின் சில பகுதிகளில் கிருமிப் பரவல் முன்னெப்பொதும் இல்லாத அளவுக்கு மோசமாக உள்ளது.
15 மாநிலங்களில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை சென்ற ஆண்டைவிட மிகவும் அதிகமாக உள்ளதாக சுகாதார மற்றும் மனித சேவைகள் துறையின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
மூன்று மாதங்களுக்கும் மேலாக ஒவ்வொரு நாளும் சராசரியாக 1,000 உயிரழப்புகள் பதிவானதாக அந்நாட்டின் அறிக்கை ஒன்று கூறுகிறது.
ஏழுநாள் சராசரியின்படி, மருத்துவமனையில் அனுமதிக்கப்
படுவோர் எண்ணிக்கையும் 6% அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த முடக்க நிலையை கொண்டு வரவேண்டிய தேவையில்லை என்றும் அமெரிக்கா வேறு வழிகளில் அதைச் சமாளிக்கும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அதிகமானோருக்குத் தடுப்பூசி போடுவது, கூடுதல் தடுப்பூசி, சிறார்களுக்கான தடுப்பூசி இயக்கம் போன்றவற்றின் மூலம் கிருமிப் பரவலை எதிர்கொள்வோம் என்று வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே, விடுமுறைக் காலம் தொடங்கியுள்ளதால் கிருமிப் பரவல் மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
இந்தக் காலகட்டத்தில் உறவினர்களைக் காண பயணம் செய்வோர் எண்ணிக்கை கிருமிப் பரவலுக்கு முந்தைய நிலைக்குச் செல்லக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.