தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் விமானங்களுக்குத் தடை
ஜோகனஸ்பர்க்: தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து செல்லும் விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் பிரிட்டன் அவசரப்பட்டுவிட்டதாக எண்ணுவதாக தென்னாப்பிரிக்கா நேற்று கூறியது.
இதுவரை கண்டறியப்பட்ட கொவிட்-19 மாறுபாட்டு வகைகளிலேயே மிகவும் வேகமாக பரவக்கூடிய பி.1.1.529 எனும் புதிய வகை உருமாறிய கிருமித்தொற்று ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது.
இதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட ஆறு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து செல்லும் விமானங்களுக்கு பிரிட்டன் உடனடியாக தடை விதித்தது.
ஜோகனஸ்பர்க்கில் நடைபெறவுள்ள கோஃல்ப் பொது விருதுப் போட்டியில் பங்கு பெறவிருந்த பிரிட்டிஷ் விளையாட்டாளர்களும் அதிலிருந்து விலகியுள்ளனர்.
மிகவும் குறைவானவர்களே இந்த வகை கிருமித்தொற்றுக்கு ஆளாகியிருந்தாலும் மற்ற உருமாறிய கிருமி வகைகளைக் காட்டிலும் வேகமாகப் பரவக்கூடியது என்பதோடு தடுப்பூசியை எதிர்க்கக்கூடிய ஆற்றல் மிக்கது என்பதும் கவலையளிக்கக்கூடியதாக உள்ளது என்கின்றனர் விஞ்ஞானி கள்.
தங்கள் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து மறுபரிசீலனை செய்வது பற்றி பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் பேசவுள்ளது, இவ்வாறு பிரிட்டோரியாவில் உள்ள வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
"பிரிட்டனின் இந்த முடிவால் இரு நாடுகளின் வர்த்தகம், சுற்றுலாத் துறை ஆகியவற்றில் ஏற்படக்கூடிய இழப்பு குறித்து நாங்கள் அதிக கவலை கொண்டுள்ளோம்," என்றார் தென்னாப்பிரிக்க வெளியுறவு அமைச்சர் நலேடி பண்டோர்.
ஆனால் தொற்றுநோய் கட்டுப்பாடு, தடுப்புக்கான ஆப்பிரிக்க மையமோ இத்தொற்று கண்டறியப்பட்ட நாடுகள் மீது பயணத் தடை விதிக்கவில்லை. அவ்வாறு செய்வது அர்த்தமுள்ளதாக இருக்காது என்று அது கூறியது.
உலகக் சுகாதார நிறுவனத்தின் தொற்றுநோயியல் நிபுணரான மரியா வான் கெர்கோவ், இந்த உருமாறிய கிருமியின் தாக்கத்தைப் புரிந்து கொள்ள சில வாரங்கள் ஆகலாம் என்று கூறினார்.
இதுகுறித்து விரிவாக ஆலோசனை நடத்த உலகச் சுகாதார நிறுவனம் நேற்று அவசரமாகக் கூடியது.
கிருமிப் பரவலால் ஆக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடான தென்னாப்பிரிக்காவில் நேற்று 2,465 பேர் கிருமித்தொற்றுக்கு ஆளாகினர். நேற்று முன்தினம் பதிவானதைவிட இது இரண்டு மடங்காகும்.
இதனை புதிய உருமாறிய கிருமிப் பரவலோடு அந்நாட்டின் தேசிய தொற்றுநோய் மையம் தொடர்பு படுத்தவில்லை என்றாலும் உள்ளூர் விஞ்ஞானிகள் அதுதான் காரணமாக இருக்கும் என்று சந்தேகின்றனர்.