நேப்பிடாவ்: ஜனநாயக அரசின் முன்னாள் ஆலோசகரான ஆங் சான் சூச்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள ராணுவம், நாளை தீர்ப்பு வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீர்ப்பில் சூச்சிக்கு பல ஆண்டு கள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
இவ்வாண்டு பிப்ரவரியில் ராணுவத் தலைவரான மின் அங் ஹிலைங், தான் ஓய்வு பெற வேண்டிய வயதில் ஜனநாயக ஆட்சியைக் கவிழ்த்து ஆட்சியில் அமர்ந்தார்.
அப்போது முதல் நோபெல் பரிசு பெற்ற ஆங் சான் சூச்சி அடையாளம் தெரியாத இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 1,200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் 10,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் கண்காணிப்புக் குழுக்கள் தெரிவித்துள்ளன.
ராணுவத்துக்கு எதிராக தூண்டிய குற்றச்சாட்டில் சூச்சிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். அரசியல் அரங்கிலிருந்து ஜனநாயகத்தை அகற்றும் நோக்கத்தோடு இந்தக் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஆனால் ஆங் சான் சூச்சி மீதான ராணுவத்தின் திட்டம் பற்றி தெளிவாகத் தெரியவில்லை. இந்நிலையில் தீர்ப்பு இன்னும் சில நாட்களுக்கு தாமதப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.