வெலிங்டன்: புதுவகை கொவிட்-19 கிருமி வகையான ஓமிக்ரான், உலகெங்கும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
இருப்பினும், கொவிட்-19 சூழலுடன் வழக்கமான வாழ்க்கை
முறைக்குத் திரும்ப நியூசிலாந்து முடிவெடுத்துள்ளது.
அதற்குத் தேவையான நடவடிக்கைகள் அடுத்த வாரத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் என்று நியூசிலாந்துப் பிரதமர் ஜெசின்டா ஆர்டன் நேற்று தெரிவித்தார்.
தற்போதைய நிலவரப்படி நியூசிலாந்தில் யாரும் ஓமிக்ரான் கிருமியால் பாதிப்படையவில்லை. இருப்பினும், மற்ற நாடுகளில் ஓமிக்ரான் மெல்ல தலைதூக்குவதை திருவாட்டி ஆர்டன் சுட்டினார்.
எனவே, விழிப்புடன் இருப்பது மிகவும் அவசியம் என்று அவர் கூறினார்.
"எங்கள் எல்லைகளுக்கு வெளியே ஆபத்து காத்துக்கொண்டிருக்கிறது என்பதை ஓமிக்ரான் நினைவூட்டுகிறது," என்றார் திருவாட்டி ஆர்டன்.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகக் கடுமையான எல்லைக் கட்டுப்பாட்டுகளை நியூசிலாந்து கொண்டுள்ளது. அடுத்த ஐந்து மாதங்களுக்கு பெரும்பாலான அனைத்துலகப் பயணிகளுக்கு அது தடை விதித்துள்ளது.
ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென் பகுதியில் உள்ள ஒன்பது நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்குப் புதிய கட்டுப்பாட்டுகளை நியூசிலாந்து கடந்த வாரயிறுதியில் நடைமுறைப்படுத்தியது.
இந்த ஐந்து நாடுகளைச் சேர்ந்த பயணிகள் மட்டுமே நியூசிலாந்துக்குப் பயணம் செய்ய முடியும் என்றும் அவர்கள் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஓமிக்ரான் கிருமி வகை எந்த அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து தெரிந்துகொள்ள கூடுதல் தகவல் தேவை என்று திருவாட்டி ஆர்டன் கூறினார்.
தடுப்பூசிக்கு அது கட்டுப்படுமா, டெல்டா கிருமி வகையைவிட அது ஆபத்துமிக்கதா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை என்றார் அவர்.