புத்ராஜெயா: மலேசியாவின் சைபர்ஜெயாவில் உள்ள செரி புத்தேரி பள்ளி விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் 139 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சிலாங்கூர் சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் ஷாரி ஞாடிமன் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தடம் அறியும் சோதனையில் பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு நவம்பர் 22ஆம் தேதி தொற்று அறிகுறி தென்பட்டதாகவும் அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் நவம்பர் 23ஆம் தேதி அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் மேலும் ஏழு மாணவர்களுக்கு நவம்பர் 29ஆம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்தக் காலக்கட்டத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
செபாங் மாவட்டத்தில் உள்ள அந்தப் பள்ளியில் தொற்று பரவாமல் இருப்பதை உறுதிசெய்ய, டிசம்பர் 1ஆம் தேதி 240 பேருக்கும் டிசம்பர் 3ஆம் தேதி 523 பேருக்கும் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இச் சோதனையில் 139 பேருக்குக் கொவிட்-19 தொற்றுப் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. அவர்களில் 114 மாணவர்கள், 15 ஆசிரியர்கள், 10 ஊழியர்கள்.
பாதிக்கப்பட்ட மாணவர்களின் பள்ளிக்கு கல்வி மூத்த அமைச்சர் ரட்ஸி ஜிடின் வருகை மேற்கொண்டு அங்குள்ள நிலைமையை ஆய்வுசெய்தார்.
தங்கிப் படிக்கும் பள்ளியில் அதிகமான மாணவர்களுக்கு கொவிட்-19 தொற்றியிருப்பது இதுவே முதல் முறை என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு தொற்று உச்சத்தில் இருந்தபோது, பள்ளியில் தொற்று அடையாளம் காணப்பட்டால் அந்தப் பள்ளி ஏழு நாட்களுக்கு மூடப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சு அறிவித்தது.
மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,806 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது. நேற்று முன்தினம் பதிவானதைக் காட்டிலும் 367 பேர் அதிகம்.
கொரேனா தொற்று நெருக்கடி தொடங்கியதில் இருந்து இதுவரை மொத்தம் 2,644,027 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
சிலாங்கூர் சுகாதாரத் துறை அறிவிப்பு