ஜகார்த்தா: ஓமிக்ரான் உருமாறிய கிருமி அச்சம் காரணமாக இந்தோனீசியா தனது எல்லைக் கட்டுப்பாட்டை இறுக்குகிறது.
ஆசிய நாடுகளில் குறிப்பாக கொவிட்-19 தொற்றால் அதிகமானோர் பாதிக்கப்பட்ட இந்தோனீசியாவில் ஓமிக்ரான் தொற்று இன்னும் பதிவாகவில்லை.
இருப்பினும் அந்நாடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயணக்கட்டுப்பாடுகளை இறுக்கியுள்ளது. அதன்படி அந்நாட்டில் வந்திறங்கும் பயணிகள் அனைவரும் 10 நாட்கள் தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ளது. முன்பு அது 7 நாட்களாக இருந்தது.
ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து நாடு திரும்பும் இந்தோனீசியர்கள் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். அத்துடன் உள்நாட்டு பயணச் சேவைகளிலும் அந்நாடு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைப்பதற்கான நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இந்தோனீசியாவில் கடந்த ஜூலை மாதம் 40,000 ஆக இருந்த சராசரி தினசரி தொற்று எண்ணிக்கை கடந்த மாதம் 400 ஆகியுள்ளது.