கோலாலம்பூர்: மலேசியாவில் முதல் ஓமிக்ரான் சம்பவம் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் சிங்கப்பூரு டனான 'விடிஎல்' பயண ஏற்பாடு தொடரும் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இம்மாதம் 19ஆம் தேதி தென்னாப்பிரிக்காவிலிருந்து சிங்கப்பூர் வழியாக மலேசிய வந்த 19 வயது பெண்ணுக்கு ஓமிக்ரான் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் நேற்று நடைபெற்ற ெசய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
"ஈப்போவில் உள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் அந்த மாணவர் படித்து வருகிறார். அவர் முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளார்," என்றார் அவர்.
நவம்பர் 29ஆம் தேதி அவர் விடுவிக்கப்படுவதற்கு முன்பு பத்து நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார். அவருடன் வாகனத்தில் பயணம் செய்த ஐவருக்கும் தொற்று இல்லை என்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டது.
"தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரான் எனும் உருமாறிய கிருமி அடையாளம் காணப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பதற்கு முன்பே நவம்பர் 19ஆம் தேதி புதிய கிருமி மலேசியாவில் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.
"ஓமிக்ரான் பற்றி தெரிய வந்ததும் நவம்பர் 11 முதல் நவம்பர் 28 வரை கோலாலம்பூர் விமான நிலையத்தில் அனைத்து தொற்றுச் சம்பவங்களும் மீண்டும் மரபணு வரிசை சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அப்படித்தான் ஓமிக்ரான் சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டது," என்று அமைச்சர் சொன்னார்.
புதிய உருமாறிய ஓமிக்ரான் தொற்றுச் சம்பவங்கள் சிங்கப்பூரிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக எட்டு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணி களுக்கு மலேசியா தடை விதித்திருந்தது.
கடந்த திங்கட்கிழமையிலிருந்து மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே தடுப்பூசி போட்டவர்களுக்கான சிறப்புப் பயண ஏற்பாட்டின் மூலம் தரை, ஆகாய வழி பயணங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
'விடிஎல்' எனும் இந்தப் பயண ஏற்பாட்டுக்கு தற்போது பாதிப்பு இருக்காது என்று திரு கைரி குறிப்பிட்டார்.
"இன்று காலை சிங்கப்பூர் அமைச்சருடன் பேசினேன். அப்போது நாங்கள் இருவரும் 'விடிஎல்' பயண ஏற்பாட்டை மறுவுறுப்படுத்தினோம். ஒவ்வொரு நாளும் நிலைமையைக் கண்காணித்து ஒருங்கிணைந்து செயல்படவும் முடிவு செய்துள்ளோம்," என்று அமைச்சர் சொன்னார்.