சம்பர்வூலு (இந்தோனீசியா): இந்தோனீசியாவின் செமெரு எரிமலை குமுறியதால் குறைந்தது 14 பேர் மாண்டுவிட்டனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். பெரும்பாலோருக்குத் தீக்காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.குறைந்தது 16 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் சில தகவல்கள் கூறின. வெள்ளப்பெருக்கைப் போல் சாம்பலில் மூழ்கியிருக்கும் பல இடங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஜாவா தீவில் ஆக உயரமான மலையான செமெரு எரிமலை குமுறியதால் அதிலிருந்து வெளிவந்த சாம்பலும் மேகம் போன்ற புகையும் அருகில் இருந்த கிராமங்களைச் சூழ்ந்தன. லுமாஜாங் வட்டாரத்தையும் மலாங் நகரையும் இணைக்கும் பாலம் துண்டிக்கப்பட்டது.
மேலும், பல கட்டடங்கள் பெரிய அளவில் சேதமடைந்தன. லுமாஜாங் வட்டாரத்தில் உள்ள குறைந்தது 11 கிராமங்களில் வீடுகள், பண்ணை உயிரினங்கள் உள்ளிட்டவை சாம்பலில் மூழ்கின. சிலர் பள்ளிவாசல்களில் அடைக்கலம் தேடிக்கொண்டனர். சிதைவுகளில் சிக்கிய சிலர் மீட்கப்பட்டனர். சம்பர்வூலு பகுதியில் சேதமடைந்த பல வீடுகள் சாம்பலால் போர்த்தப்பட்டிருந்தன. மோட்டார்சைக்கிள்களில் வீடு திரும்ப முயன்ற செமெருவாசிகளைத் தொண்டூழியர்களை அந்தப் பக்கம் போகாமல் பார்த்துக்கொள்ள முயன்றதாக நேரில் பார்த்த ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியிருக்கிறார்.
இந்த நெருக்கடியை உடனே கையாண்டு பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை வழங்குமாறு இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ உத்தரவிட்டதாக மாநில அரசாங்கம் தெரிவித்தது. நேற்று முன்தினம் குமுறிய செமெரு எரிமலை, 12,000 மீட்டருக்கும் அதிகமான உயரத்திற்குச் சாம்பலை வெளியேற்றியது. எரிமலைக் குழம்பு வழிந்தது. சில நாள்களாகப் பலத்த காற்றுடன் கூடிய மழை பொழிந்ததால் செமெரு மலை குமுறியதாக இந்தோனீசியாவின் வானிலை ஆய்வு நிலையம் ஒன்று தெரிவித்தது. எரிமலை குமுறிய பகுதியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதிக்கு வரவேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 1,300க்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டனர் அல்லது தற்காலிகமாக இடம் மாற்றப்பட்டனர்.

