இந்தியாவில் கடந்த வாரயிறுதி நிலவரப்படி, 'ஓமிக்ரான்' வகை கொரோனா கிருமியால் 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தானில் ஒன்பது பேர், மகாராஷ்டிராவில் எட்டுப் பேர், கர்நாடகாவில் இருவர், குஜராத்திலும் இந்தியத் தலைநகர் புதுடெல்லியிலும் தலா ஒருவர் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் அதைப் போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
"ஓமிக்ரான் இங்கு வந்துவிட்டது, சமூகத்தில் அது பரவத் தொடங்கிவிட்டது. முகக்கவசம் அணிந்திடுங்கள், தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்," என்றார் கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் அர்விந்தர் சிங் சோயின்.
இந்தியாவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியுடைய 944 மில்லியன் பேரில் 51 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். என்றாலும், ஒருமுறை தடுப்பூசி போட்டுக்கொண்ட மில்லியன் கணக்கானோர் இன்னும் இரண்டாவது தவணை தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளவில்லை என்பதை அரசாங்கப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.


