லண்டன்: பிரிட்டனிலும் டென்மார்க்கிலும் மேலும் பல ஓமிக்ரான் உருமாறிய கிருமித்தொற்று சம்பவங்கள் நேற்று பதிவானது. இதையடுத்து ஐரோப்பாவில் ஓமிக்ரான் பெருமளவு பரவி இருக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
45 நாடுகளில் ஓமிக்ரான் தொற்று பரவியுள்ளது என்றாலும் ஐரோப்பாவில் அதிகமான சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
பிரிட்டனில் நேற்று பதிவான 86 சம்பவங்களையும் சேர்ந்து, அங்கு இதுவரை 246 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டென்மார்க்கில் 183 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. முந்திய வாரத்தைவிட இது மூன்று மடங்கிற்கும் அதிகமாகும்.
ஐரோப்பாவில் கொவிட்-19 தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதோடு, ஓமிக்ரான் சம்பவங்களும் பெருகியுள்ளது அங்கு கவலையை மேலும் அதிகரித்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் ஐரோப்பாவைத் தொற்றுநோயின் மையப்பகுதி என்றது உலக சுகாதார நிறுவனம்.
இதற்கிடையே, அமெரிக்காவிலும் குறைந்தது 16 மாநிலங்களில் ஓமிக்ரான் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
விடுமுறைக்காலம் நெருங்கும் நேரத்தில், உலகளவில் ஓமிக்ரான் தொற்று சம்பவங்கள் அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

