லண்டன்: கிருமிப் பரவலின் அடுத்த அலையைச் சமாளிக்க உலக நாடுகள் தயார் நிலையில் இல்லை என்கிறது புதிய அறிக்கை ஒன்று.
2021 உலகளாவிய சுகாதார பாதுகாப்பு குறியீட்டின்படி கொள்ளை நோயைச் சமாளிக்கக்கூடிய திறன் அடிப்படையில் 195 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
லாப நோக்கமற்ற குழுவான அணுசக்தி அச்சுறுத்தல் முன்னெடுப்பு அமைப்பும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் அமைப்பும் இதனை வெளியிட்டுள்ளன.
90 விழுக்காட்டிற்கும் அதிகமான நாடுகளிடம் அவசரகாலத்தில் மருந்துகளை விநியோகிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அறிக்கை கண்டறிந்துள்ளது.
உயர் தயார்நிலைக்கான 80.1 புள்ளியை எந்த நாடும் எட்டவில்லை. 75.9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, ஃபின்லாந்து, கனடா, தாய்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.
சிங்கப்பூர் 57.4 புள்ளிகளுடன் 24வது இடத்தில் உள்ளது.
சுகாதார அமைப்புகள், ஊழியர்கள், ஆய்வகங்கள், உள்கட்டமைப்பு, அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இவை மதிப்பிடப்பட்டுள்ளன.
கடுமையான கட்டுப்பாடுகள்
இதற்கிடையே, அதிகமானோர் தொற்றுக்கு ஆளாவதாலும் ஓமிக்ரான் பரவலாலும் பிரிட்டன், டென்மார்க், ஹாங்காங் ஆகிய நாடுகள் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளன.
பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, தடுப்பூசி சான்றிதழைக் காண்பிப்பது, வீட்டிலிருந்து வேலை செய்வது என பிரிட்டனில் கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
கிருமிப் பரவலை மட்டுப்படுத்து வதற்கு, மீண்டும் கட்டுப்பாடு களைக் கொண்டு வருவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ளார் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன்.
முழுமையான முடக்கநிலைக்குச் செல்லாமல் இருக்க வேண்டுமென்றால், இந்த நடவடிக்கைகள் அவசியம் என்றும் அவர் சொன்னார்.
டென்மார்க்கில் கிறிஸ்மஸ் விடுமுறைக்கு பள்ளிக்கூடங்கள் முன்னதாகவே மூடப்படுகின்றன.
இரவுநேர கேளிக்கைக் கூடங்கள் மூடப்பட்டதோடு அனைவரையும் வீட்டில் இருந்து வேலை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார் அந்நாட்டு பிரதமர் மெட் ஃபிரடெரிக்சன்.
ஹாங்காங்கில் 65 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்குத் தொடர்பு தடமறிதல் செயலி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், மதுபானக்கூடங்கள், உணவகங்கள் உள்ளிட்ட
18 இடங்களுக்குச் செல்வோர் இதன் மூலம் தங்களது வருகையைப் பதிவு செய்ய வேண்டும்.


