லண்டன்: விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்துவது தொடர்பாக பிரிட்டன் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டில் அமெரிக்க அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது.
இதனையடுத்து தற்போது லண்டனின் உயர் பாதுகாப்பு பெல்மார்ஷ் சிறையில் இருக்கும் 50 வயதான விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படவுள்ளார்.
அசாஞ்சே மனிதாபிமானத்துடன் நடத்தப்படுவார் என்பதற்கான அமெரிக்காவின் உத்தரவாதங்கள் போதுமானவை என்று நீதிமன்றம் கூறியது.
கொலராடோவில் உள்ள அதிக பாதுகாப்பு மிக்க சிறைச்சாலையில் அவரை அடைக்கமாட்டோம் என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு மாற்றப்படுவார் என்றும் அசாஞ்சே தடுப்புக்காவலின் நிபந்தனைகள் குறித்து அமெரிக்கா அளித்த உத்தரவாதங்களில் திருப்தி அடைவதாக நீதிபதி திமோதி கூறினார்.
அத்துடன் ஒப்படைப்பு கோரிக்கையை உள்துறை செயலாளர் பிரித்தி பட்டேலுக்கு மறுபரிசீலனை செய்ய அனுப்புமாறு கீழ் நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட்டது.
பிரிட்டனில் சட்ட நடைமுறையை மேற்பார்வையிடும் பிரித்தி பட்டேல், அசாஞ்சே நாடு கடத்துவது குறித்த இறுதித் தேர்வை எடுப்பார்.
அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களை 'ஹேக்' செய்து விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் வெளியிட்டார் அசாஞ்சே. இதையடுத்து அவர் மீது அமெரிக்கா குற்ற வழக்கு தொடர்ந்தது.
இதற்கிடையே பிரிட்டன், அசாஞ்சே கைது செய்யததைத் தொடர்ந்து, அவரைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு லண்டனில் அமெரிக்கா முறையீடு செய்தது.

