தோக்கியோ: நெருப்புக்கோழியின் 'ஆன்டிபாடிகளைப்' பயன்படுத்தி முகக்கவசம் ஒன்றை ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.
இதன் சிறப்பு என்னவென்றால், முகக்கவசத்தில் கொவிட்-19 கிருமி இருந்தால், அதைப் புற ஊதா கதிர்களின் கீழ் ஒளிரச் செய்யும்.
மேற்கு ஜப்பானில் உள்ள கியோட்டோ வட்டார பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் யசுஹிரோ சுகாமோட்டோவும் அவரது குழுவினரும் இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.
கிருமித்தொற்றுக்கு எதிராக பறவைகள் வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்டுள்ளன என்ற முந்திய ஆய்வுகளின் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
இதன்படி நெருப்புக்கோழியின் 'ஆன்டிபாடிகள்' பூசப்பட்ட முகக்
கவச வடிகட்டியை ஆய்வாளர்கள் உருவாக்கினர்.
தொற்றுக்கு ஆளானவர்கள் அணிந்திருந்த இந்த வகை முகக்கவசங்கள் புற ஊதா கதிரின் ஒளியில் சோதிக்கப்பட்டன. அப்போது மூக்கு, வாய் பகுதிகளில் ஒளிர்ந்ததாக ஆராய்ச்சிக் குழு கூறியது.
புற ஊதா கதிர்கள் இல்லாமல் தானாகவே ஒளிரும்படி முகக்கவசங்களை மேம்படுத்த முடியும் என்று குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது குறைந்த விலையில் கிருமித்தொற்று பரிசோதனையை மேற்கொள்ள உதவும் என்றும் அக்குழு கூறியது.

