லண்டன்: வேகமாகப் பரவும் புதிய வகை கொரோனா கிருமித்தொற்றான ஓமிக்ரானுக்கு எதிரான பாதுகாப்பை தடுப்பூசி எவ்வாறு வழங்கும் என்பது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வு, தொற்றுக்கு எதிரான பாதுகாப்பை தடுப்பூசி முழுமையாக வழங்குவதில் குறைபாடு இருக்கக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும் மூன்றாவது தடுப்பூசி எனப்படும் பூஸ்டரை போட்டுக்கொள்ளும்போது ஓமிக்ரானுக்கு எதிராகக் கணிசமான பாதுகாப்பைப் பெறமுடியும் என்று அது தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் அரசாங்க விஞ்ஞானிகளால் கடந்த வெள்ளிக்கிழமை இந்த ஆய்வின் அறிக்கை வெளியிடப்பட்டது.
இருப்பினும் தடுப்பூசி போட்டுக்கொண்ட இங்கிலாந்து மக்களிடம் ஓமிக்ரான் எவ்வளவு வேகமாகப் பரவும் என்பது குறித்து இன்னும் கவனிக்கப்பட வேண்டிய அம்சங்கள் இருப்பதாக அரசாங்க விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட நான்கு மாதங்களுக்குப் பின்னர் ஓமிக்ரான் தொற்றுக்கு எதிராக வெறும் 35 விழுக்காட்டுப் பாதுகாப்பை மட்டுமே அது வழங்கமுடியும் என்கிறது ஆய்வு. டெல்டா வகை தொற்றுக்கு எதிரான பாதுகாப்பைவிட இது குறைவாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அதேநேரம், ஃபைசர்-பயோஎன்டெக் மூன்றாவது தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட பின்னர் பாதுகாப்பு 75 விழுக்காட்டுக்கு உயர்வதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.
இதற்கிடையே, இஸ்ரேலிய ஆராய்ச்சியாளர்களும் கிட்டத்தட்ட இதே கருத்தைத் தெரிவித்துள்ளனர். ஃபைசர்பயோஎன்டெக்கின் மூன்றவாது தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்களுக்கு ஓமிக்ரான் தொற்றிலிருந்து கணிசமான பாதுகாப்பு கிடைப்பதை ஆய்வு மூலம் தாங்கள் கண்டறிந்ததாக நேற்று முன்தினம் அவர்கள் கூறினர்.
ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் கடந்த வாரத் தொடக்கத்தில் வெளியான ஆய்வறிக்கையை இஸ்ரேலிய விஞ்ஞானிகள் பிரதிபலிப்பதாகவும் ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேல் சுகாதார அமைச்சுடன் இணைந்து ஷெபா மருத்துவ நிலையம் ஆய்வை மேற்கொண்டது. ஐந்து முதல் ஆறு மாதங்களுக்கு முன்னர் இரு தடுப்பூசிகளையும் போட்டவர்களின் ரத்தத்தையும் ஒரு மாதத்திற்கு முன்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் ரத்தத்தையும் ஒப்பிட்டு ஆய்வு நடத்தப்பட்டது.