வாஷிங்டன்: அமெரிக்காவில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 மில்லியனைத் தாண்டிவிட்டதாக ராய்ட்டர்ஸ் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
புதுவகை ஓமிக்ரான் கிருமிப் பரவலைத் தடுக்க உலக நாடுகள் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ள நிலையில், உருமாறிய டெல்டா கிருமி அமெரிக்காவைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது.
கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக அமெரிக்காவில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில், கடந்த இரு வாரங்களாக அன்றாட கொரோனா பாதிப்பு மீண்டும் ஏறுமுகத்தில் உள்ளது. இதற்கு டெல்டா கிருமியே முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
அதேபோல, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கையும் 20 விழுக்காடுவரை அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில், அங்கு கொவிட்-19 தொற்று இறப்பு எண்ணிக்கை 4.6% கூடிவிட்டது. இதுவரை அங்கு கொரோனா தொற்றி யோரில் 800,000க்கும் மேற்பட்டோர் மாண்டுவிட்டனர்.
ஏறக்குறைய பாதி அமெரிக்க மாநிலங்களில் ஓமிக்ரான் கிருமி கண்டறியப்பட்டுவிட்டது. ஆனாலும், புதிய பாதிப்புகளில் 99 விழுக்காட்டிற்கு டெல்டா கிருமியே காரணமாக உள்ளது என்று நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு மையத்தின் இயக்குநர் டாக்டர் ரோஷல் வெலன்ஸ்கி குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் ஓமிக்ரான் இன்னும் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக உருவெடுக்கவில்லை.
"திடீரென, புதிதாக பாதிக்கப்படுவோரில் நூறுக்குப் பத்துப் பேரிடம் ஓமிக்ரான் கண்டறியப்பட்டால், அடுத்த வாரரத்தில் அது 20 விழுக்காடாக உயரலாம். அப்போதுதான், டெல்டாவின் இடத்தை ஓமிக்ரான் பிடிக்கலாம் எனக் கூற முடியும்," என்றார் வெய்ல் கார்னல் மருத்துவக் கல்லூரியின் நுண்ணுயிரியல், நோய்த்தடுப்பாற்றலியல் பேராசிரியர் டாடர் ஜான் மோர்.
அமெரிக்காவில் கொவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை 25 மில்லியனை எட்ட கிட்டத்தட்ட ஓராண்டு காலம் தேவைப்பட்டது என்றும் ஆனால், அடுத்த 323 நாள்களில் அவ்வெண்ணிக்கை 50 மில்லியனைத் தொட்டுவிட்டதாகவும் ராய்ட்டர்ஸ் தரவுப் பகுப்பாய்வு கூறுகிறது.

