கோலாலம்பூர்: மலேசிய நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்டம் 2022 நேற்று நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து தனது தலைமைத்துவத்திற்கான முதல் சோதனையில் மலேசிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் வெற்றி பெற்றார்.
கொவிட்-19க்குப் பிறகு முற்போக்கான, நிலையான பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் பல்வேறு உத்திகளைச் செயல்படுத்துவது உள்ளிட்டவற்றுக்காக இதுவரை இல்லாத அளவுக்கு 332.1 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
செப்டம்பரில் முக்கிய எதிர்க்கட்சிக் கூட்டணியான பக்கத்தான் ஹரப்பானுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் காரணமாக, வரவுசெலவுத் திட்டத்திற்கான நாடாளுமன்ற ஒப்புதலில் பெருமளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
அந்த ஒப்பந்தத்தின்படி, அம்னோ தலைமையிலான அரசாங்கம் பல ஜனநாயக சீர்திருத்தங்களுக்கு உறுதியளித்ததோடு மலேசியாவின் கொவிட்-19 மீட்சித் திட்டத்திற்காக கூடுதல் நிதி ஒதுக்கவும் வழி வகுத்தது.
பக்கத்தான் ஹரப்பானைச் சேர்ந்த
90 நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் வரவுசெலவுத் திட்டத்திற்கான வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதற்கிடையே, நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடர் திட்டமிட்டதைத் தாண்டி நீட்டிக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.

