சோல்: தென்கொரியாவில் கிருமித்தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயிரிழப்பும் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டுகின்றன.
நேற்றுமுன்தினம் அங்கு ஒரே நாளில் 80 பேர் மாண்டுவிட்டனர். கிருமிப் பரவல் தொடங்கியதில் இருந்து அங்கு பதிவான ஆக அதிக எண்ணிக்கையாகும் இது.
சென்ற வாரத்தில் அங்கு சராசரியாக நாளொன்றுக்கு 6,320 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின. இது நவம்பர் 1ஆம் தேதிக்கு முந்திய வாரத்தில் இருந்ததைவிட மூன்று மடங்கு அதிகமாகும்.
அதுபோல் கடைசி ஏழு நாள் சராசரி உயிரிழப்பும் கிட்டத்தட்ட ஐந்து மடங்கு உயர்ந்து 57 ஆனது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் கிட்டத்தட்ட 80 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட படுக்கைகள் நிரம்பிவிட்டன.
சனிக்கிழமை இரவு நிலவரப்படி, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்காக சோலில் 1,739 பேர் காத்துக்கொண்டிருந்தனர். அவர்களில் 1,222 பேர் மோசமான நிலையில் இருந்தனர்.
கடந்த ஐந்து வாரங்களில் மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாத சூழலில், கிட்டத்தட்ட 29 பேர் வீட்டிலேயே மாண்டு விட்டதாக அதிகாரத்துவ புள்ளி விவரங்கள் கூறுகின்றன. கொவிட்-19 நோயாளிகளுக்கு அதிக படுக்கைகள் ஒதுக்க வேண்டியிருப்பதால், சிகிச்சை தேவைப்படும் மற்ற நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

