வாஷிங்டன்: கொவிட்-19 கொள்ளை நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் அந்த நோயால் மாண்டவர்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 800,000ஐ கடந்துவிட்டது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள் இதனைத் தெரிவித்தது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நார்த் டகோட்டா, அலாஸ்கா போன்ற பல மாநிலங்களின் மொத்த மக்கள்தொகையைவிட அதிகம். இந்த ஆண்டில் மட்டும் 450,000 பேர் பலியாகிவிட்டனர். 2020 டிசம்பர் மாதம் தொடங்கி அமெரிக்கா தனது மக்களுக்குத் தடுப்பூசி போடும் பணியைத் தீவிரமாகச் செயல்படுத்தி வரும் நிலையிலும் அங்கு மரணம் தொடருகிறது. உயிரிழந்தோரில் பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
"கொவிட்-19 கொள்ளைநோயால் 800,000 அமெரிக்க மக்கள் உயிரிழந்துவிட்டனர். மாண்ட ஒவ்வொருவரையும் நாம் நினைவில்கொள்வோம். அவர்களின் குடும்பத்தினருக்காக நாம் பிரார்த்திப்போம்," என்று அதிபர் ஜோ பைடன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் செப்டம்பர் மாதம் ஆகக் கடைசியாக நடத்தப்பட்ட ஆய்வின்படி தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் மரணமடையும் வாய்ப்பு 14 விழுக்காடு அதிகம் என்று தெரியவந்தது.
டெல்டா கிருமித்தொற்று காரணமாக அமெரிக்காவில் எழுந்த நான்காம் அலையில் தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்றது. 332 மில்லியன் மொத்த மக்கள்தொகையில் 60 விழுக்காட்டினருக்கு மேல் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இருப்பினும் வசதி படைத்த இதர நாடுகளின் தடுப்பூசி போட்ட விகிதத்தில் அமெரிக்கா பின்தங்கி உள்ளது.
தற்போது ஐந்தாம் அலை கிருமிப் பரவலால் அமெரிக்கா பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவில் கண்டு பிடிக்கப்பட்ட ஓமிக்ரான் தொற்று காரணமாக மக்களில் பலர் வீட்டுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு பதிவாகிவரும் மொத்த தொற்று எண்ணிக்கையில் 2.9 விழுக்காடு ஓமிக்ரான் தொற்று ஆகும். இதற்கு முந்திய வாரத்தைக் காட்டிலும் இது 0.4 விழுக்காடு அதிகம்.
இது மேலும் வேகமாகப் பரவக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அடுத்த மாதமே இதன் வேகம் அதிகரிக்கலாம் என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையம் கூறியுள்ளது.

