சிட்னி: தடுப்பூசி போட்டுக்கொண்ட, திறன்பெற்ற வெளிநாட்டு ஊழியர்களுக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கும் ஆஸ்திரேலியா நேற்று தனது எல்லைகளைத் திறந்துவிட்டது.
இந்தப் பிரிவினர் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய கிட்டத்தட்ட ஈராண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் கொவிட்-19 முடக்கநிலையால் பாதிக்கப்பட்ட பொருளியலை மீட்டெடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக வெளிநாட்டினருக்கு எல்லைகள் திறக்கப்பட்டு உள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி குறிப்பிட்டது.
கொரோனா கிருமித்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 2020 மார்ச்சில் ஆஸ்திரேலியா தனது அனைத்துலக எல்லைகளை மூடியது.
குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குடிமக்கள் மற்றும் நிரந்தரவாசிகள் மட்டுமே நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது எல்லைகள் திறக்கப்
படுவதால் ஊழியர் பற்றாக்குறை தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொருளியல் மீட்சிக்கு அந்தப் பற்றாக்குறை அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.
வெளிநாட்டு மாணவர்கள் உள்ளே வருவதன் மூலம் ஏராளமான தற்காலிகக வேலைகள் நிரப்பப்படும்.
அக்டோபர் மாத நிலவரப்படி 160,000 மாணவர்கள் உள்ளிட்ட 235,000 வெளிநாட்டினர் ஆஸ்திரேலியப் பயணத்திற்கான விசா பெற்றுள்ளதாக அதிகாரத்துவ தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலியா 16 வயதுக்கு மேற்பட்ட தனது மக்களில் கிட்டத்தட்ட 90 விழுக்காட்டினருக்கு முழுமையாகத் தடுப்பூசி போட்டுள்ளது.
மேலும், ஓமிக்ரான் தொற்று கிளம்பியதைத் தொடர்ந்து பூஸ்டர் தடுப்பூசிக்காகக் காத்திருக்கும் காலத்தை அது குறைத்துவிட்டது.

