சிங்கப்பூர்: பருவநிலை தொடர்பான பேரிடர்களால் இவ்வாண்டு ஆசிய பசிபிக் வட்டாரத்தில் 57 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஏற்கெனவே கொவிட்-19 கொள்ளைநோயால் துன்பத்தில் சிக்கிய நிலையில் பேரிடர்களும் அந்த வட்டார மக்களை பாடாய்ப் படுத்தி இருப்பதாகத் தெரிய வந்து உள்ளது. இது தொடர்பாக செஞ்சிலுவைச் சங்கக் கூட்டமைப்பான ஐஎஃப்ஆர்சி சில தகவல்களை வெளியிட்டு உள்ளது.
புயல், வெள்ளம் தொடர்பாக தெற்காசியா கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் மட்டும் 18 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாயினர். பங்ளாதேஷையும் வெள்ளம் ஆட்டிப்படைத்தது.
அத்துடன் நேப்பாளத்தில் மூன்றில் ஒருபகுதி வெள்ளத்தாலும் நிலச்சரிவுகளாலும் பாதிக்கப்பட்டது.
பருவநிலை தொடர்பான ஐந்து பேரிடர்களில் நான்கை ஆராய்ந்ததில் வானிலை தொடர்பான சம்பவங்கள் தீவிரமடைந்திருப்பதைக் காணமுடிவதாக 'ஐஎஃப்ஆர்சி'யின் அவசரநிலை செயலாக்க மேலாளர் திருவாட்டி ஜெசிகா லெட்ச் தெரிவித்துள்ளார். கடுமையான புயல் காற்று, வெள்ளம், வெப்ப அலை, கொசுக்கள் பரப்பும் நோய்கள் போன்றவை தற்போது காணப்படும் புதிய வகை பாதிப்புகள் என்றார் அவர்.
பேரிடர் சம்பவங்களின் அதிகரிப்பு சாதாரண மக்கள், அரசாங்கங்கள் மற்றும் நிவாரண அமைப்புகள் போன்றவற்றுக்கு அதிக சிரமங்களைத் தரக்கூடும் என்றும் திருவாட்டி ஜெசிகா தெரிவித்தார்.

