கோத்தா திங்கி: மலேசியாவின் கடற்கரை அருகே தஞ்சோங் பாலவ் கடற்பகுதியில் படகு ஒன்று மூழ்கியதில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 21 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
மாண்ட 11 பேரும் வெளிநாட்டவர்கள் போலத் தெரிவதாகவும் அவர்கள் எவரிடமும் ஆவணங்கள் எதுவுமில்லை என்றும் 'த ஸ்டார்' செய்தி கூறியது. அவர்கள் இந்தோனீசியாவைச் சேர்ந்தவர்கள் என்று பின்னர் வந்த தகவல்கள் தெரிவித்தன.
60 பேருடன் சென்றுகொண்டு இருந்த படகு மூழ்கிய நிலையில் நேற்றுக் காலை 7.40 மணியளவில் காணப்பட்டதாக ஜோகூர் தீயணைப்பு, மீட்புத் துறை பேச்சாளர் கூறினார்.
உயிரிழந்த 11 பேரில் நால்வர் பெண்கள் என்றும் இன்னும் 25 பேர் தேடப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தேடி மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டு இருப்பதாக நேற்று பிற்பகலில் அந்தப் பேச்சாளர் கூறினார்.
மலேசிய கடற்படை உதவியுடன் மீட்புப் பணிகள் தொடர்ந்தன. படகிற்குள் யாரும் சிக்கியிருக்கிறார்களா என்பதை உறுதி செய்ய அதனை மீட்பதற்கான பணிகள் முதலில் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
மலேசிய கடற்பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைய படகு மூலம் வந்ததாக நம்பப்படுகிறது என்று மலேசிய கடல்துறை அமலாக்க முகவை இயக்குநர் நூருல் ஹிஸாம் ஸக்கரியா தெரிவித்தார்.
மோசமான வானிலை காரணமாக படகு மூழ்கி இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
சம்பவம் பற்றி அதிகாலை 4.30 மணியளவில் தகவல் கிடைத்ததாகவும் காணாமல் போனவர்
களைத் தேடி மீட்கும் பணியில் விமானமும் சுற்றுக்காவல் படகுகளும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் சொன்னார்.

