ஆஸ்திரேலியா, கடும் ஊழியர் பற்றாக்குறையைச் சமாளிக்க, பெருந்தொற்றுச் சூழலுக்கு முன்பு இருந்த அளவில் குடியேறிகளை ஏற்றுக்கொள்ள இருக்கிறது.
ஆஸ்திரேலிய அரசாங்கம், ஆண்டுக்கு 160,000 குடியேறிகளை ஏற்றுக்கொள்ளப் போவதாகக் கூறியுள்ளது.
அந்நாட்டு நிதி அமைச்சர் ஜாஷ் ஃபிரைடன்பெர்க், தி ஆஸ்திரேலியன் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில், வெளிநாட்டிகளிலிருந்து குடியேறிகள் விரைவாக அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.
புதன்கிழமை (டிசம்பர் 15) அன்று, அந்நாடு வெளிநாட்டு மாணவர்களுக்கும் திறன்பெற்ற ஊழியர்களுக்கும் அதன் எல்லைகளைத் திறந்துவிட்டது.
ஆஸ்திரேலிய விதித்த பொது முடக்கங்கள் முடிவுக்கு வந்துள்ளன.
மாநிலங்களுக்கு இடையிலும் அனைத்துலக அளவிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணங்களும் மீண்டும் தொடங்கியுள்ளன.
இதனால் ஆஸ்திரேலியப் பொருளியல் மீண்டு வருகிறது.
கடும் ஊழியர்ப் பற்றாக்குறை நிலவுகிறது. குறிப்பாக, விருந்தோம்பல், சுகாதாரப் பராமரிப்பு, சுற்றுப்பயணம், வர்த்தகம் போன்றவற்றில் ஊழியர்கள் பெரும் அளவில் தேவைப்படுகின்றனர்.
அதிக மக்கள் தொகை கொண்ட நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மாநிலங்களில் பொதுமுடக்கம் கடந்த மாதம் முடிவுக்கு வந்த பின்னர், நாட்டில் வேலையின்மை விகிதம் 4.6 விழுக்காட்டுக்குக் குறைந்தது.
ஊழியர்கள் வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள உணவகங்களும் கடைகளும் விளம்பரப்படுத்தி வருகின்றன.

