லண்டன்: பிரிட்டனில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று முன்தின நிலவரப்படி அங்கு 78,610 பேரை கொரோனா தொற்றியுள்ளது. தொற்றுப் பரவல் ஆரம்பித்ததில் இருந்து இதுவே ஆக அதிகமான ஒரு நாள் எண்ணிக்கையாகும்.
இந்த எண்ணிக்கை டிசம்பர் 15ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பதிவான தொற்று எண்ணிக்கையைக் காட்டிலும் 10,000 அதிகம்.
தொற்றுப் பதிவின் ஏழுநாள் சராசரி எண்ணிக்கை 65,008 ஆக உள்ளது. இது அதற்கு முந்தைய ஏழு நாள் சராசரி எண்ணிக்கையைக் காட்டிலும் 1.91 விழுக்காடு அதிகம். வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை பல மடங்கு பெருக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
பிரிட்டனில் புதன்கிழமை நிலவரப்படி ஏழு நாட்களில் 165 தொற்று மரணங்கள் பதிவாகியுள்ளன. இது அதற்கு முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 5 விழுக்காடு குறைவு என்று தரவுகள் வழி தெரிய வந்துள்ளது.
"நாட்டின் பல பகுதிகளில் ஓமிக்ரான் தொற்று, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இரட்டிப்பு விகிதத்தில் பரவி வருவது உறுதியாகியுள்ளது என்று இங்கிலாந்து மருத்துவத் துறையின் தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விட்டி ஒரு செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
"இதை நாம் மிக எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. தொற்றின் அதிவேகப் பரவல் நமக்குப் பெரிய அச்சுறுத்தலைத் தந்துள்ளது," என்று அவர் கூறினார். அவர் பேசிய செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன், மருத்துவமனையின் முதன்மைப் பராமரிப்புத் துறையின் இயக்குநர் டாக்டர் நிக்கி கனனி ஆகியோர் உடன் இருந்தனர்.
"கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின்போது முக்கியமாக சந்திக்க வேண்டியவர்களை மட்டும் சந்தியுங்கள். தவிர்க்க முடியாத விருந்து நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்துகொள்ளுங்கள். அப்போதுதான் நாம் தொற்றுப் பாதிப்பில் இருந்து நம்மைப் பாதுகாக்க முடியும்," என்று பேராசிரியர் விட்டி பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.
புதிதாகத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் எத்தனை விழுக்காட்டினருக்கு ஓமிக்ரான் வகை தொற்று இருக்கிறது என்பது குறித்த விவரங்களை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
இருப்பினும் லண்டனில் அதிகமானோருக்கு கொவிட்-19 உருமாறிய கிருமியே தொற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அன்றாடத் தொற்று அதிகரித்து வரும் இவ்வேளையில் மருத்துவமனை நிலவரங்கள் குறித்தும் இறப்பு விகிதங்கள் குறித்தும் தெளிவான விவரம் தெரியவில்லை என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஓமிக்ரான் வகை கிருமிப் பரவல் அங்கு அதிகரித்துள்ள வேளையில், கொவிட்-19 பாதிப்பு அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனில் குறைந்த விகித தடுப்பூசி போட்ட நகரமான லண்டனில்தான் ஓமிக்ரான் வகைக் கிருமி அதிவேகமாகப் பரவி வருகிறது. அங்கு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக பிரதமர் ஜான்சன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அங்கு கிறிஸ்மஸ் களைகட்டியுள்ளது. எனவே, அந்தக் கொண்டாட்டத்தைப் பாதிக்கும் வகையில் எவ்வித புதிய கட்டுப்பாடுகளையும் பிரதமர் ஜான்சன் அறிவிக்கவில்லை.