நைஜீரியாவில் இருந்து மலேசியா
வந்த 8 வயதுச் சிறுமிக்கு ஓமிக்ரான்
கோலாலம்பூர்: மலேசியாவில் முன்னதாக ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்று இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இப்போது எட்டு வயதுச் சிறுமி ஒருவருக்கு அந்தத் தொற்று இருப்பது சோதனையில் தெரிய வந்துள்ளது. அந்தச் சிறுமி தனது குடும்பத்தினருடன் நைஜீரியா சென்று திரும்பியுள்ளார். இதனை அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஜமாலுதீன் நேற்று அறிவித்தார். மேலும் 18 பேருக்கு தொற்றிய கொவிட்-19, ஓமிக்ரான் வகையைச் சார்ந்ததா என்பது குறித்து கண்டறிய மரபணுச் சோதனையை ஒத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.
நேற்று பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமி டிசம்பர் 5ஆம் தேதி தன் குடும்பத்தினருடன் நைஜீரியாவில் இருந்து கத்தாரின் டோஹா வழியாக மலேசியா வந்து சேர்ந்தார். அப்போது விமான நிலையத்தில் நடந்த சோதனையில் அவரை கொரோனா தொற்றியிருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டார். மலேசியாவில் நேற்று முன்தினம் நள்ளிரவு நிலவரப்படி 3,900 புதிய தொற்று பதிவாகியுள்ளது. அவற்றில் 3,881 சமூகத் தொற்று. மேலும் 33 தொற்று மரணங்கள் பதிவாகியுள்ளன. இதுவரை அங்கு 30,989 பேர் தொற்றால் மரணமடைந்துவிட்டனர்.
பிரிட்டனில் இருந்து இந்தோனீசியா வந்தவருக்கு ஓமிக்ரான்
ஜகார்த்தா: இந்தோனீசியாவில் இதுவரை தலைகாட்டாமல் இருந்த ஓமிக்ரான் இப்போது பிரிட்டனுக்குச் சென்றுவந்த ஒருவர் மூலம் வந்துள்ளது. அங்கு முதன்முதலாக நேற்று ஓமிக்ரான் தொற்று அடையாளம் காணப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் புடி குணாடி சடிகின் நேற்று தெரிவித்தார். இப்போது ஜகார்த்தாவில் உள்ள விஸ்மா அட்லெட் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அந்த நோயாளிக்கு நேற்று முன்தினம் ஓமிக்ரான் தொற்றியிருப்பது உறுதியானது. இருப்பினும் அது சமூக அளவில் பரவவில்லை என்று அமைச்சர் குணாடி கூறினார். மேலும் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்த ஐந்து பேரின் கொவிட்-19 தொற்று குறித்து மரபணுச் சோதனைஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
சரவாக் மாநிலத் தேர்தலில்
வாக்களிக்க அஞ்சும் பொதுமக்கள்
கோலாலம்பூர்: மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் நாளை (டிசம்பர் 18) சனிக்கிழமை சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்களிக்க மக்கள் கூடும்போது தொற்று பரவும் சாத்தியம் அதிகம் உள்ளதால், வாக்களிக்க அதிகமான வாக்காளர்கள் வரமாட்டார்கள் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அங்குள்ள குடியிருப்பாளர்கள் சிலரிடம் நடத்தப்பட்ட ஆய்வின்மூலம் இது தெரியவந்துள்ளது. அந்த ஆய்வில், பலரும் வாக்களிப்பதைக் காட்டிலும் பாதுகாப்பே முக்கியம் என்று கூறியுள்ளனர். மலேசியாவின் பெரிய மாநிலமான சரவாக்கில் இந்தத் தேர்தலில் 82 தொகுதிகளில் 349 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தலின்போது அளவுக்கு அதிகமானோர் ஒன்றும்கூடும் நிலை உருவாகும். எனவே, தொற்றுப் பரவும் வாய்ப்பு அதிகம் என்று பொதுமக்கள் அஞ்சுவதாகக் கூறப்படுகிறது. சாபாவில் தேர்தலுக்குப் பின் பலருக்கு கொரோனா தொற்றுப் பரவியது. இதுவே நமக்குப் படிப்பினை என்று பலரும் அந்த ஆய்வில் கூறியதாக மலேசிய மெயில் இணைய ஊடகம் தெரிவித்தது.

