ஆயிரக்கணக்கானோர் முகாம்களில் தஞ்சம்
டாப்பா: பிலிப்பீன்ஸை நேற்று சக்திவாய்ந்த சூறாவளி தாக்கியது. மத்திய மற்றும் தெற்கு வட்டாரங்களில் 185 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதாக பிலிப்பீன்ஸ் வானிலை மையம் தெரிவித்தது. இதனையடுத்து கடலோரப் பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு முகாம்கள், விளையாட்டு அரங்கங்கள், பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ராய் என்று பெயரிடப்பட்ட அந்தச் சூறாவளி, சியார்கோ தீவைக் கடக்கும்போது அதன் வேகம் 195 கி.மீ. ஆக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், விசயாஸ் வட்டாரம், பலவான் தீவுகள் ஆகியவற்றைக் கடந்து கரையைக் கடக்கும் தறுவாயில் சற்று பலவீனடையும் என்றும் வானிலை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுவே பிலிப்பீன்ஸில் இந்த ஆண்டில் வீசிய சக்திவாய்ந்த சூறாவளிக் காற்று என்று மாநில வானிலை மையம் தெரிவித்தது. "இந்தப் பேய்க்காற்று கடலோரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கும் அவர்களது உடைமைகளுக்கும் பெரிய அச்சுறுத்தலைத் தந்துள்ளது," என்று அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் திரு ஆல்பெர்ட்டோ போகனெக்ரா கவலை தெரிவித்தார். பருவநிலை மாற்றம் சூறாவளியின் வேகத்தைத் கடுமையாக்குவதோடு கணிக்கமுடியாததாக ஆக்குவது கவலையைத் தருவதாக ஆல்பெர்ட்டோ கூறினார்.
45,000க்கு மேற்பட்டோர் நெருக்கடிநிலை முகாம்களில் அடைக்கலம் நாடியுள்ளதாக தேசிய பேரிடர் முகவை தெரிவித்தது. சூறாவளியால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணியும் நிவாரணப் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். பல இடங்களில் மின்கம்பங்களையும் மரங்களையும் இந்தச் சூறாவளி பெயர்த்துத் தள்ளியதோடு கடலோரப் பகுதிகளில் கடுமையான சேதத்தை விளைவித்திருக்கும் என்று வானிலை மைய அதிகாரி கிறிஸ்டோஃபர் பெரெஸ் கூறினார். ஆனால், சேதங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
புயல்காற்று அதிகமாகத் தாக்கும் நாடுகளில் பிலிப்பீன்ஸும் ஒன்று. இங்கு ஆண்டுக்கு சராசரியாக 20 சூறாவளி, புயல்காற்றுகள் தாக்கும் என்று கூறப்படுகிறது.

