பேங்காக்: தங்கள் நாட்டில் ராணுவத்திற்கும் சிறுபான்மையினரைக் கொண்ட கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை மோசமடைந்திருப்பதால் மியன்மாரைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் அண்டை நாடான தாய்லாந்துக்குத் தப்பி ஓடியுள்ளனர். அவர்களில் சிறுவர்களும் அடங்குவர்.
இரு நாட்டு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள தாய்லாந்தின் மே சொட் நகருக்கு சுமார் 700 பேர் சென்றதாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர். 545 சிறுவர்கள் உட்பட 2,503 பேர் தாய்லாந்துக்குச் சொந்தமான எல்லைப் பகுதியில் அடைக்கலம் தேடிக்கொண்டுள்ளதாகவும் அந்நாட்டில் இயங்கும் மியன்மார் ஊழியர்களுக்கான 'எய்ட் அலயன்ஸ் கமிட்டி' எனும் உதவிக் குழு கூறியது.
"தாய்லாந்து அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு நாங்கள் உணவு வழங்குகிறோம்," என்று இக்குழுவின் அதிகாரிகளில் ஒருவரான திரு யே மின் சொன்னார். தாய்லாந்தில் அடைக்கலம் தேடிவந்துள்ள பெரும்பாலோர் மியன்மாரின் லே லே காவ் உள்ளிட்ட சில கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் தொலைபேசிவழி தெரிவித்தார்.
கடந்த பிப்ரிவரி மாதம், ஆங் சான் சூ சி தலைமையில் இருந்த குடிமக்கள் அரசை மியன்மாரின் ராணுவம் வெளியேற்றியது. அதிலிருந்து மியன்மார் பிரச்சினையில் மூழ்கியது. நகரங்களில் பலர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். கிராமப் பகுதிகளில் அவ்வப்போது ராணுவத்திற்கும் அதற்கு எதிராக இயங்குவோருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுவந்துள்ளன.
மியன்மாரின் எல்லைப் பகுதிகளில் கிளர்ச்சியாளர்களுக்கும் ராணுவத்திற்கும் இடையிலான சண்டையும் அவ்வப்போது மோசமடைந்துள்ளது. இப்பகுதிகளில் சுமார் 1.6 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.

