ஒசாக்கா: ஜப்பானின் ஒசாக்கா நகரில் நிகழ்ந்த தீச் சம்பவத்தில் குறைந்தது 27 பேர் பலியாகியிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம், அந்நகரின் மனநல மருந்தகம் ஒன்றில் நேர்ந்தது.
பாதிக்கப்பட்டோரில் ஒன்பது பேர் மருத்துவமனையில் மாண்டதாக உறுதிப்படுத்தப்பட்டது. ஒருவர் காயமடைந்தார்.
ஒருவர் வேண்டுமென்றே தீயை மூட்டியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. மருந்தகம் இருந்த கட்டடத்தில் ஓர் ஆடவர் தீ வைத்ததாகவும் சில தகவல்கள் தெரிவித்தன. ஒரு வயதான ஆடவர் வைத்திருந்த பையிலிருந்து தீப்பிடிக்கக்கூடிய திரவம் கசிந்ததாகவும் அதனால் தீ மூண்டதாகவும் சொல்லப்படுகிறது. இவற்றின் தொடர்பில் காவல்துறையினர் விசாரணை நடத்திவருவதாக சில ஊடகங்கள் கூறின. சிங்கப்பூர் நேரப்படி காலை ஒன்பது மணிக்கு மருந்தகம் திறக்கப்பட்டது. அதற்கு சிறிது நேரத்திற்குப் பிறகு தீ மூண்டது. 30 நிமிடங்களில் தீ அணைக்கப்பட்டதாக என்ஹெச்கே செய்தி நிறுவனம் தெரிவித்தது.

