கோலாலம்பூர்: மலேசியாவில் கிருமித் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டிருந்தாலும், மக்கள் தொடர்ந்து கவனமாக இருக்கவேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் வலியுறுத்தியுள்ளார்.
மலேசியாவில் நேற்று 11 ஓமிக்ரான் தொற்று சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தலைவர் நூர் ஹிஷாம் அப்துல்லா அறிவித்ததைத் தொடர்ந்து இஸ்மாயில் இவ்வாறு எச்சரித்துள்ளார். இதுவரை அங்கு கண்டறியப்பட்ட 13 ஓமிக்ரான் சம்பவங்கள் அனைத்தும் வெளிநாட்டில் இருந்து சென்றவர்களுடன் தொடர்புடையவை.
"தொற்று எண்ணிக்கை குறைந்திருந்தாலும் நாம் இன்னமும் பாதுகாப்பான நிலையில் இல்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
"வர்த்தக நடவடிக்கைகள் மீண்டும் செயல்பட தொடங்கிவிட்டால், அவை மீண்டும் முடங்காது என்று உறுதி அளித்திருக்கிறேன். எனவே முடக்கநிலையை மீண்டும் கொண்டு வராமல் இருக்க கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்," என்றார் அவர்.
ஆகஸ்ட் மாதத்தில் 20,000த்திற்கும் மேற்பட்டவர்கள் தொற்றுக்கு ஆளாகிய நிலையில், நேற்று 4,083 பேர் மட்டுமே தொற்றுக்கு ஆளாகினர்.

