சிங்கப்பூர்: பூப்பந்து மட்டுமின்றி ஒட்டுமொத்த விளையாட்டு உலகின் பார்வையை சிங்கப்பூரின் பக்கம் திருப்பியிருக்கிறார் இந்நாட்டின் பூப்பந்து வீரர் லோ கியன் இயூ. உலகப் பூப்பந்துப் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதியாட்டம் வரை சென்ற முதல் சிங்கப்பூரர் என்ற பெருமையைப் பெற்ற லோ, அத்துடன் திருப்தியடையாமல் கிண்ணத்தையும் வேட்டையாடி முத்திரை பதித்துள்ளார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்தில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்தை 21-15, 22-20 எனும் ஆட்டக்கணக்கில் லோ வென்றார். உலகப் பூப்பந்துச் சம்மேளனம் நடத்தும் இந்த பூப்பந்துப் போட்டி 1977ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சீனா, இந்தோனீசியா, ஜப்பான், டென்மார்க் ஆகிய நான்கே நாடுகள்தான் கிண்ணத்தை வென்றிருந்தன. இப்போது அவற்றுடன் ஐந்தாவதாகச் சேர்ந்துள்ளது சிங்கப்பூர்.
"கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் சிங்கப்பூரின் கொடியை உயரப் பறக்கவைத்ததற்கு நன்றி. நாம் அனைவரும் உங்களை எண்ணிப் பெருமைப்படுகிறோம்," என்று சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் ஃபேஸ்புக்கில் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.
"வாழ்த்துகள், கியன் இயூ! நீங்கள் சிங்கப்பூருக்குப் பெருமை சேர்த்திருக்கிறீர்கள். உங்களின் அடுத்த வெற்றிக்காக ஆவலாகக் காத்திருக்கிறோம்," என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் தமது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டார்.
கடந்த மூன்று மாதங்களில் உலகின் ஆகச் சிறந்த 10 பூப்பந்து வீரர்களில் ஆறு பேரை வென்றிருக்கிறார் லோ. இதன் மூலம் உலகின் தலைசிறந்த பூப்பந்து வீரர்களில் ஒருவராக இவர் உருவெடுத்துள்ளார். இப்போட்டியின் அரையிறுதிச் சுற்றில் உலகத் தரவரிசையில் முதலிடத்தை வகிக்கும் டென்மார்க்கின் ஆண்டர்ஸ் ஆண்டோன்சனை லோ வென்று ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இதற்குமுன் நடைபெற்ற காலிறுதியாட்டத்தில் காயமுற்றதால் லோ சக்கர நாற்காலியில் நகரவேண்டிய சூழலும் ஏற்பட்டது. ஆனால் வெற்றியாளர்களிடம் சாக்குப்போக்கு இருக்காது என்பதை செயலில் நிரூபித்துக் காட்டினார்.
லோவின் வெற்றியைப் பல பகுதிகளில் உள்ள இவரது குடும்பத்தார் கொண்டாடினர். மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஜியார்ஜ் டவுன் பகுதியில் இருக்கும் லோவின் பெற்றோரான திருவாட்டி கிரேஸ் கான், திரு லோ பின் கியட் இருவரும் இறுதியாட்டத்தை மிகவும் ஆவலாகப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
அரையிறுதியாட்டத்திற்குப் பிறகு தான் அனுப்பிய குறுந்தகவலுக்குத் தனது மகன் பதிலளிக்கவில்லை என்றார் 57 வயது திருவாட்டி கான். "அது நல்லது. அவர் முழு கவனத்துடன் இருக்கிறார் என்று அர்த்தம், யாராலும் தனது கவனம் சிதறாமல் பார்த்துக்கொள்கிறார் என்று பொருள்," எனத் திருவாட்டி கான் சொன்னார்.
லோவின் பெற்றோருடன் இவரது சகோதரரான 30 வயது கியன் வெய், இவர்களின் குடும்ப நண்பரான கே. ஹெச். ஓங் ஆகியோரும் சேர்ந்து வெற்றியைக் கொண்டாடினர்.
தற்போது 24 வயதாகும் லோ, 2010ஆம் ஆண்டு பினாங்கிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தார். சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளியில் சேர்ந்துகொள்ள மலேசியாவிலிருந்து வந்த இவர், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூர் குடிமகனானார்.
இவரின் மற்றொரு சகோதரரான 26 கியன் ஹியன், அங் மோ கியோவில் வசிக்கிறார். லோவைப் போல் கியன் ஹியன்னும் ஒரு பூப்பந்து வீரர், சிங்கப்பூர் குடிமகன்.
"நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது பயிற்றுவிப்பாளர்கள்... ஏன் பெற்றோரும்கூட கேட்பர், பூப்பந்தில் எங்களின் இலக்கு என்னவென்று, உலக விருதை வெல்வதே என்று பதிலளிப்போம்," என்று கூறிய தென்கிழக்காசிய விளையாட்டுகளில் பல கிண்ணங்களை வென்றுள்ள கியன் ஹியன், "அது உண்மையிலேயே நடக்கும் என்று யார் நினைத்துப் பார்த்திருப்பார்," என்று மிகவும் பெருமைப்பட்டார்.
லோவின் குடும்பத்தார் மட்டுமல்ல, சிங்கப்பூரின் இதர விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரும் இவரைத் தங்களின் தங்கமகனாக எண்ணி தங்களின் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் குவித்தனர். அனைத்துலக அளவில் பூப்பந்தில் 10 ஆண்டுகளுக்கும் மேல் காணாத சாகசத்தை அனுபவித்துள்ளது சிங்கப்பூர்.

