கோலாலம்பூர்: மலேசியாவில் மோசமான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உள்கட்டமைப்பையும் வீடுகளையும் மறுசீரமைக்க அந்நாட்டு அரசாங்கம் 100 மில்லியன் ரிங்கிட் (32 மில்லியன் வெள்ளி) தொகையை வழங்கப்போவதாக பிரதமர் இஸ்மாயில் சாப்ரி அறிவித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் 1,000 ரிங்கிட் தொகை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். "இவ்வாண்டு செப்டம்பர் மாதம், ஒவ்வொரு குடும்பத்துக்கும் கருணை அடிப்படையில் வழங்கப்படும் நிதியுதவியை அரசாங்கம் 1,000 ரிங்கிட்டுக்கு உயர்த்தியது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிலாங்கூருக்கும் இதர ஆறு மாநிலங்களுக்கும் அந்தத் தொகையை வழங்குவதைத் துரிதப்படுத்துவோம்," எனத் திரு இஸ்மாயில் சொன்னதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
சிலாங்கூரில் ஒன்பது மாவட்டங்களில் 162 தற்காலிகத் தங்குமிடங்களில் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட 32,000 பேருக்கும் அதிகமானோர் இருப்பதாக இதன் முதலமைச்சர் அமிருதீன் ஷாரி டுவிட்டரில் தெரியப்படுத்தினார். அவற்றில் கிள்ளானில்தான் ஆக அதிகமானோர் வீடுகளைவிட்டு வெளியேற நேரிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். சிலாங்கூரில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்தனர்.
மலேசியாவின் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் குறைந்தது 61,000 பேர் வீடுகளைவிட்டு வெளியேறினர்.
இதனால் கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரிக்கும் என்று மலேசியாவின் சுகாதார அமைச்சு எச்சரித்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரில் குறைந்தது 181 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் கூறினார். எனினும், அவர்களில் பெரும்பாலோருக்கு நோய்க்கான அறிகுறிகள் இல்லை அல்லது மோசமான அறிகுறிகள் இல்லை. மலேசியாவில் நேற்று புதிதாக 2,589 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது.

