தம்முடைய முன்னாள் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் 550 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்ட் (S$994 மி.) ஜீவனாம்சம் வழங்க துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமுக்கு லண்டன் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 21) உத்தரவிட்டுள்ளது.
இங்கிலாந்து நீதிமன்றம் ஒன்றின் உத்தரவின்படி, விவாகரத்து செய்துகொண்டதன் தொடர்பில் செலுத்தப்படும் ஆகப்பெரிய ஜீவனாம்சம் இது என நம்பப்படுகிறது.
துபாய் ஆட்சியாளரான 72 வயது ஷேக் முகமதுக்கும் அவருடைய 47 வயது முன்னாள் மனைவி இளவரசி ஹயா பிந்த் அல் ஹுசேனுக்கும் இடையே சட்ட ரீதியாக நீண்டநாள் மோதல் ஏற்பட்டது.
தம்முடைய இரு பிள்ளைகளுடன் இளவரசி ஹயா லண்டனில் வசித்து வருகிறார். அவருடைய பிள்ளைகளுக்கு 13 மற்றும் ஒன்பது வயதாகிறது.
இளவரசி ஹயா, ஜோர்தான் மாமன்னர் அப்துல்லாவின் ஒன்றுவிட்ட சகோதரியாவார்.
இளவரசி ஹயாவை 2004ல் மணந்தார் ஷேக் முகமது. அது, ஷேக் முகமதின் இரண்டாவது அதிகாரபூர்வ திருமணமாகும். ஷரியா சட்டத்தின்கீழ் 2019ல் இளவரசி ஹயாவுக்கு தெரியாமல் அவரை ஷேக் முகமது விவாகரத்து செய்ததாக நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.