மழை, வெள்ளத்துக்கு 20க்கும் மேற்பட்டோர் பலி; சிலாங்கூரில் 17 சடலங்கள் மீட்பு
கோலாலம்பூர்: வெள்ளத்தில் மூழ்கிய மைதின் பேரங்காடியிலிருந்து ஏராளமான பொருட்கள் சூறையாடப்பபட்டன. ஆனால் அதன் உரிமையாளர் அமீர் அல் மைதின் அதனை தடுத்து நிறுத்தவில்லை. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தமது கடையிலிருந்து உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல அவரே அனுமதித்துள்ளார்.
"நான் தடுக்கவில்லை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு வேறு வழியில்லாமல் திருடியிருக்கலாம்," என்று மைதீன் கூறியதாக நியூ ஸ்ட்ரெயிட்ஸ் நாளேடு தெரிவித்தது.
நேற்று முன்தினம் ஷா அலாமில் தாமான் ஸ்ரீ மூடாவில் உள்ள மைதின் பேரங்காடி வெள்ளத்தில் மூழ்கியது. அப்போது அங்கிருந்த பலர் கடைக்குள் புகுந்து பொருட்களை சூறையாடினர். இதனால் மைதீனுக்கு பெரும் நட்டம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
"வெள்ளம், கொவிட்-19 தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும். இதற்காக இறைவனைப் பிரார்த்தனை செய்வோம்," என்று நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் மைதின் தெரிவித்தார்.
இதற்கிடையே ஷா அலாமில் போலிஸ் தலைவரான உதவி ஆணையர் பஹ்ருதீன் மட் தயிப், திங்கட்கிழமை பிற்பகல் ஒரு மணியிலிருந்து இரண்டு மணி வரை தாமான் ஸ்ரீ மூடாவில் இருந்த பல கடைகளில் சூறையாடப்பட்டதாகத் தெரிவித்தார்.
திரு மைதீனின் பேரங்காடியைத் தவிர அருகில் இருந்த கேகே சூப்பர்மார்ட், செலெவன், ஜிமார்ட் போன்ற கடைகளில் பலர் புகுந்து பொருட்களை எடுத்துச் சென்றனர். குற்றச்செயல்களைத் தடுக்க காவல்துறைக் குழு ஒன்று சுற்றுக்காவலில் ஈடுபட்டு வருகிறது.
சிலாங்கூர் முதல்வர் அமிருதின் ஷாரி, வெள்ளத்தை எதிர்கொள்ள நவம்பர் மாதத்திலிருந்தே மாநிலம் தயாராக இருந்ததாகக் கூறினார்.
ஆனால் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்தது என்றார்.
வரலாறு காணாத மழை பல வட்டாரங்களில் பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ள வேளையில் மலேசிய அரசாங்கம் நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. பொதுமக்களும் பாதிக்கப்பட்டவர்களை படகு மூலமாக மீட்டு, உணவு, உடைகளை வழங்கி உதவி வருகின்றனர்.
மலேசியாவில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப் படுகிறது.
சிலாங்கூரில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17க்கு அதிகரித்துள்ளதாக முதல்வர் அமிருதின் ஷாரி தெரிவித்தார்.
இவர்களில் ஒருவர் தொண்டூழியர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10,000 ரிங்கிட்டும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தலா ஆயிரம் ரிங்கிட்டும் நிவாரண உதவியாக வழங்கப்படும் என்று சிலாங்கூர் முதல்வர் அறிவித்துள்ளார்.
செவ்வாய்க் கிழமை காலை 8.00 மணி நிலவரப்படி 4,672 குடும்பங்களைச் சேர்ந்த 30,632 பேர் சிலாங்கூரில் உள்ள 203 தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
மலேசியப் பிரதமர் மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் வெள்ளப் பேரிடரைக் கையாள்வதில் குறைகள் இருப்பதை நேற்று ஒப்புக்கொண்டுள்ளார். குறிப்பாக எதிர்க்கட்சி ஆளும் சிலாங்கூர் மாநிலம் அவரைக் குறை கூறி உள்ளது.
"எதிர்காலத்தில் செயல்பாடு களை மேம்படுத்துவோம்," என்று கூறியுள்ள பிரதமர், மத்திய அரசு மட்டுமே பொறுப்பாகாது, மாநில அரசுக்கும் பொறுப்பு உள்ளது என்றார்.
சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மலேசியா, பிலிப்பீன்ஸ் ஆகிய இரு நாடுகளுக்கும் அனுதாபச் செய்தியை அனுப்பியுள்ளார்.
மலேசிய வெளியுறவு அமைச்சர் சைஃபுதின் அப்துல்லாவுக்கு அனுப்பிய செய்தியில் இந்த இக்கட்டான நேரத்தில் மலே சியாவுக்கு சிங்கப்பூர் உறுதுணை யாக இருக்கும் என்று அமைச்சர் விவியன் குறிப்பிட்டுள்ளார். மலே சியாவின் பல பகுதிகளில் ஏற்பட்டு உள்ள வெள்ளம், சேதம் மற்றும் உயிரிழப்புகளுக்காக வருந்துவ தாகவும் அவர் கூறியுள்ளார்.

