ஜெருசலம்: இஸ்ரேலில் ஓமிக்ரான் உருமாறிய கிருமித்தொற்றுக்கு ஒருவர் பலியானதைத் தொடர்ந்து, 60 வயதுக்கு மேற்பட்டோர், மருத்துவ பணியாளர்களுக்கு 4வது முறை தடுப்பூசி போட அந்நாடு முடிவு செய்துள்ளது.
சுகாதார அமைச்சின் நிபுணர் குழு பரிந்துரைத்த இந்த முடிவை அந்நாட்டு பிரதமர் நஃப்தாலி பென்னட் வரவேற்றுள்ளார்.
இது உலகம் முழுவதும் பரவி வரும் ஓமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நற்செய்தி என்றார் அவர்.
மூத்த சுகாதார அதிகாரிகள் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டியிருப்பினும், கூடிய விரைவில் நான்காவது தடுப்பூசியை போட்டுக் கொள்ளுமாறு இஸ்ரேலியர்களை அவர் வலியிறுத்தினார்.
ஓமிக்ரான் தொற்றுக்கு ஆளான 60 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர் திங்கட்கிழமை மாண்டுவிட்டார். ஆனால் ஏற்கெனவே அவருக்கு இருந்த வேறு சில நோய்கள் காரணமாக அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாக மருத்துவர்கள் கூறினர்.
அந்நாட்டில் குறைந்தபட்சம் 340 பேர் ஓமிக்ரான் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, துருக்கி, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு இஸ்ரேஸ் பயணத் தடை விதித்துள்ளது.

