லண்டன்: உலகின் அதிக வெப்பமிக்க ஆண்டுகளில் ஒன்றாக அடுத்த ஆண்டு இருக்கும் என்று பிரிட்டனின் வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.
தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதற்கு முன்பைவிட வெப்பநிலை 1.09 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று அது முன்னுரைக்கிறது.
2015க்குப் பிறகான சில ஆண்டு களைவிட அடுத்த ஆண்டு வெப்பநிலை சற்று குறைவாகக் இருக்கக்கூடும். இருப்பினும், தொடர்ந்து எட்டாவது ஆண்டாக தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதற்கு முன்பு இருந்ததைவிட, வெப்பநிலை 1 டிகிரிக்கும் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பருவநிலை மாற்றம் காரணமாக பயிர் விளைச்சல் 30 விழுக்காடு குறையும் என்றும் அதேசமயம் வரும் ஆண்டுகளில் உணவுத் தேவை 50 விழுக்காடு அதிகரிக்கும் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.
கார்பன் வெளியேற்றத்தைப் பெருமளவு குறைக்காவிட்டால் உலகளாவிய வெப்பநிலை அதிகரித்துக்கொண்டே இருக்கும் என்கின்றனர் பருவநிலை விஞ்ஞானிகள். இதனால் வெப்ப அலைகள் போன்ற நிகழ்வுகள் அடிக்கடி ஏற்படும் என்றும் அதன் காரணமாக உயிரிழப்பு ஏற்படும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.

