பிரேசிலில் கனமழை, வெள்ளம்
சால்வடோர்: பிரேசிலின் வடகிழக்குப் பகுதியில் உள்ள பாஹியா மாநிலத்தில் நேற்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 11,000க்கு மேற்பட்டோர் வீடுகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 4,185 பேர் முகாம்களில் அடைக்கலம் நாடிஉள்ளனர். பாஹியா மாநிலத்தின் குவாரட்டிங்கா, இட்டோரோ உள்ளிட்ட 19 நகரங்கள் கனமழையாலும் வெள்ளத்தாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்தும், தகவல் தொடர்பும் முடங்கியுள்ளன. அங்கு கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து பெய்து வரும் கனமழையால் கடந்த வியாழக்கிழமை வரை 17 பேர் வரை மாண்டனர் என்று அம்மாநில அரசின் பாதுகாப்பு முகவை நேற்று தெரிவித்தது.
பாஹியாவின் தலைநகர் சால்வடோர் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 250 மி.மீ. மழை பொழிந்துள்ளது. இது இம்மாதத்தில் பெய்யும் சராசரி மழையைக் காட்டிலும் ஐந்து மடங்கு அதிகம் என்று அதிகாரிகள் கூறினர்.
நியூசிலாந்தில் அன்றாடத்
தொற்று இரட்டிப்பானது
சிட்னி: நியூசிலாந்தில் கிறிஸ்மஸ் தினத்திற்கு முந்தைய நாளில் இருந்து நேற்று வரை பதிவான அன்றாடத்தொற்று தொடர்ந்து சராசரிப் பதிவைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் சமூகத்தில் 126 பேர் தொற்றுப் பாதிப்புக்கு இலக்காகியுள்ளனர். அவர்களில் 45 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எட்டுப் பேர் அவசர சிகிச்சைக் கண்காணிப்புப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவிலும் அன்றாடத் தொட்டு அதிகரித்த வண்ணம் உள்ளது. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மட்டும் 6,394 தொற்று பதிவாகியுள்ளது. விக்டோரியா மாநிலத்தில் 27% குறைந்து, புதிதாக 1,608 தொற்று பதிவாகியுள்ளது.
சவூதி அரேபியாவில் இருந்து மலேசியா வந்த பயணிகளுக்கு ஓமிக்ரான்
ஜோகூர்: மலேசியாவில் சவூதி அரேபியா சென்று திரும்பிய மூன்று பேருக்கு ஓமிக்ரான் தொற்று இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது. ஜோகூரைச் சேர்ந்த ஒரு தம்பதியும், மலாக்காவைச் சேர்ந்த மாது ஒருவரும் சவூதி அரேபியா சென்று திரும்பினர். அவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் ஓமிக்ரான் வகை கொரோனா தொற்றியிருப்பது தெரியவந்தது. ஜோகூரைச் சேர்ந்த தம்பதி, டிசம்பர் 4ஆம் தேதி சவூதி அரேபியாவுக்குச் சென்று, டிசம்பர் 16ஆம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் வந்திறங்கினர்.அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ஆர்டி-பிசிஆர் சோதனையின் முடிவு டிசம்பர் 18ஆம் தேதி வந்தது. அதில் அவர்களுக்கு கொவிட்-19 தொற்றியிருப்பது தெரிய வந்தது. இன்னொருவரான மலாக்காவைச் சேர்ந்த 34 வயது மாது டிசம்பர் 4ஆம் தேதி சவூதி அரேபியாவுக்குச் சென்றுவிட்டு, டிசம்பர் 15ஆம் தேதி நாடு திரும்பினார்.

