வாஷிங்டன்: ஓமிக்ரான் உருமாறிய கிருமிப் பரவலுக்கு மத்தியில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமெரிக்காவின் நியூயார்க் நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டிசம்பர் 5ஆம் தேதிக்கும் இந்த வாரத்திற்கும் இடையில் 18 வயதுக்குக்கீழ் உள்ள பிள்ளைகள் கொவிட்-19 தொடர்பில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் விகிதம் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக நியூயார்க் மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் தடுப்பூசிக்குத் தகுதி பெறாத ஐந்து வயதுக்கும் குறைவான பிள்ளைகள் என்றும் அது கூறியது.
அமெரிக்காவில் சென்ற ஏழு நாட்களாக நாளொன்றுக்கு சராசரியாக 190,000 பேர் தொற்றுக்கு ஆளாவதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் புள்ளிவிவரம் கூறுகிறது.
ஓமிக்ரான், விடுமுறை என கிருமித்தொற்று பரிசோதனை தேவைப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அதில் சுணக்கம் நிலவுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து பெருந்தொற்று ஆலோசகர் ஆண்டனி பவுசி, "கிருமித்தொற்று பரிசோதனையில் சுணக்கம் இருப்பது உண்மைதான். அடுத்த மாத துவக்கத்திலிருந்து இது சரியாகும்." என்றார்.
இதற்கிடையே, ஓமிக்ரான் பரவலால் அமெரிக்கர்கள் பலரும் தங்கள் புத்தாண்டு விடுமுறைப் பயணங்களை ரத்து செய்து வருகின்றனர். இதனால், நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்தாகி
உள்ளன.
விமான ஊழியர்களுக்கு உடல்நலக் குறைவு, தொற்றுக்கு ஆளான ஊழியர்கள் என பலர் தனிமைப்படுத்தப்பட்டதும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதற்கான காரணங்களாக கூறப்படுகின்றன.

