எமிரேட்ஸ்: எட்டு இடங்களில் இருந்து துபாய் வருவதற்கான விமானச் சேவை நிறுத்திவைப்பு

எமிரேட்ஸ்: எட்டு இடங்களில் இருந்து துபாய் வருவதற்கான விமானச் சேவை நிறுத்திவைப்பு

1 mins read
b28b26bd-1379-4201-a91f-f3558eda8a5e
துபாய் விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள எமிரேட்ஸ் விமானங்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

எமிரேட்ஸ் விமான நிறுவனம், எட்டு இடங்களில் இருந்து துபாய்க்கு வரும் விமானச் சேவைகளை செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 28) முதல் நிறுத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

அடுத்த அறிவிப்பு வெளியாகும்வரை இந்தக் கட்டுப்பாடுகள் நடப்பில் இருக்கும்.

ஆப்பிரிக்காவின் எட்டு இடங்களில் இருந்து துபாய்க்கு வரவோ துபாய் வழியாக மற்ற இடங்களுக்குப் பயணம் செய்யவோ கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக எமிரேட்ஸ் இணையப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நைரோபி (கென்யா), தாருஸ் சலாம் (தான்சானியா), அடிஸ் அபாபா (எத்தியோப்பியா) உள்ளிட்டவை அந்த இடங்களில் அடங்கும்.

துபாயில் இருந்து ஆப்பிரிக்காவின் அந்த எட்டு இடங்களுக்குப் பயணம் மேற்கொள்வதில் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே எமிரேட்ஸ் விமானப் பயணச்சீட்டுகளை வைத்திருப்போர், விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கும்போது தத்தம் பயண முகவர்களையோ பயணச்சீட்டுகளுக்கு முன்பதிவு செய்யும் அலுவலகத்தையோ அணுகலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.