இங்கிலிஷ் பிரிமியர் லீக் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் லிவர்பூல் அணி நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் லெஸ்டர் சிட்டி அணியிடம் காற்பந்துப் பாடம் கற்றுக்கொண்டது.
லெஸ்டர் சிட்டியின் வீரர்களில் பலர் காயம் காரணமாக விளையாட முடியாமல் விலகியிருக்க, கிடைத்த பல கோல் போடும் வாய்ப்புகளை லிவர்பூல் அணி கோட்டைவிட்டது.
அதிலும் குறிப்பாக ஆட்டத்தின் 16ஆம் நிமிடத்தில் லிவர்பூல் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை அதன் நட்சத்திர தாக்குதல் வீரர் முகமது சாலா பந்தை நேராக லெஸ்டர் கோல்காப்பாளர் கைகளுக்கு உதைத்து வாய்ப்பை வீணடித்தார்.
பின்னர் இரண்டாம் பாதி ஆட்ட தொடக்கத்தில் சாடியோ மானே என்ற மற்றொரு லிவர்பூல் வீரர் பந்தை கோல் கம்பத்துக்கு மேலே உதைத்து மற்றுமோர் அற்புதமான வாய்ப்பை கோட்டைவிட்டார்.
இப்படி கிடைத்த வாய்ப்புகளை கோட்டைவிட்ட லிவர்பூலுக்கு லெஸ்டர் சிட்டியின் லுக்மான் என்ற வீரர் ஆட்டத்தின் கிட்டத்தட்ட 60வது நிமிடத்தில் தமது குழு மேற்கொண்ட எதிர்த் தாக்குதலில் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி பந்தை பலம் கொண்ட மட்டும் உதைத்து, கோல் போட்டு 1-0 என லிவர்பூல் அணியை தோற்கடித்து இதன் மூலம் லிவர்பூலின் வெற்றிக் கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதற்கு முன் மான்செஸ்டர் சிட்டியுடன் நடந்த ஆட்டத்தில் தோல்வியைத் தழுவிய லெஸ்டர் குழுவை வெற்றி கொண்டு தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் மான்செஸ்டர் சிட்டிக்கு அருகில் செல்வதை விட்டுவிட்டு லிவர்பூல் அணி நேற்றைய ஆட்டத்தில் தோற்றது. இதன் விளைவாக மான்செஸ்டர் சிட்டியை விட ஐந்து புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

