பல வாரத்துக்கு பிறகு இந்தியாவில் ஒரே நாளில் 10,000க்கும் மேற்பட்டோருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 13,154 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக நேற்றுக் காலை இந்தியச் சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. அந்நாட்டில் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 961ஆக உயர்ந்துள்ளது. இதனை அடுத்து, மொத்த பாதிப்பு 34,822,040 ஆனது.
கிருமித்தொற்றால் மேலும் 268 பேர் இறந்துவிட, மொத்த உயிரிழப்பு 480,860 ஆனது.
டெல்லி, மும்பை, கோல்கத்தா, சென்னை உட்பட 14 நகரங்களில் கொவிட்-19 பரவல் திடீரென அதிகரித்துள்ளதால் விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி எட்டு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இச்சூழலில், பல மாநிலங்களும் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன.
ஜனவரி 7ஆம் தேதிவரை மும்பை நகரில் நால்வருக்குமேல் ஒன்றுகூட அனுமதியில்லை. கேரளாவில் நேற்று முதல் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் 3ஆம் தேதி முதல் பிரிட்டனில் இருந்து கோல்கத்தா நகருக்கு விமானங்கள் வந்துசெல்ல மேற்கு வங்க மாநில அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது. அத்துடன், அங்கு தரையிறங்கும் அனைத்துலகப் பயணிகள் அனைவரும் கட்டாயம் கொவிட்-19 பரிசோதனைக்கு உட்பட வேண்டும். குஜராத்திலும் கொவிட்-19 கட்டுப்பாடுகள் ஜனவரி 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

