ரோம்: உலகளவில் கடந்த ஏழு நாட்களில் கிருமித்தொற்று சம்பவங்கள் ஆக அதிகளவில் உயர்ந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் தரவுகள் கூறுகின்றன.
பொருளாதாரத்தைப் பாதிக்காமல், ஓமிக்ரான் உருமாறிய கிருமிப் பரவலைச் சமாளிக்க உலக நாடுகள் போராடி வந்தாலும் கிருமிப் பரவல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
டிசம்பர் 22 முதல் 28ஆம் தேதி வரை உலகளவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 900,000 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பொலிவியா, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகளில் நேற்று முன்தினம் ஆக அதிக கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின.
மற்ற கிருமி வகைகளைவிட ஓமிக்ரான் கிருமி குறைவான பாதிப்பையே ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறினாலும் அதிகமானோருக்குத் தொற்று உறுதி செய்யப்படும் போது அவர்களுக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் திணறக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் நேற்று முன்தினம் 208,000 பேர் தொற்றுக்கு ஆளாகினர். இது அந்நாட்டின் ஆக அதிக எண்ணிக்கை மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகளிலேயே ஆக அதிகமாகும்.
அமெரிக்கா, பிரிட்டன் மட்டுமல்லாமல் இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகளிலும் ஆக அதிக தொற்று சம்பவங்கள் பதிவாகின.
அமெரிக்காவில் செவ்வாய்க்கிழமையன்று தொற்றுக்கு ஆளானோர் ஏழு நாள் சராசரி எண்ணிக்கை ஆக அதிகமாக பதிவானது.
இவ்வாண்டு ஜனவரி மாதம் 251,232ஆக இருந்த அந்த எண்ணிக்கை, செவ்வாய்க்கிழமையன்று 267,000ஆக இருந்தது.
அத்துடன் அமெரிக்காவில் டெல்டா கிருமியைவிட ஓமிக்ரான் சம்பவங்கள் அதிகமாக பதிவாகின.
சென்ற வாரம் 23 விழுக்காடாக இருந்த ஓமிக்ரான் சம்பவங்கள், இந்த வாரம் 59 விழுக்காடானது.
முந்திய அலையைப் போல் இல்லாவிட்டாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் விகிதமும் மெல்ல அதிகரித்து வருகிறது.
பிரிட்டனிலும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் புதன்கிழமையன்று, 183,037 பேர் தொற்றுக்கு ஆளாகினர். நேற்று முன்தினம் பதிவானதைவிட இது 50,000 அதிகம் என்று அரசாங்க புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
அங்கு பதிவான புதிய கிருமித் தொற்று சம்பவங்களில் கிட்டத்தட்ட 90 விழுக்காடு ஓமிக்ரான் உருமாறிய தொற்றாகும்.
அயர்லாந்தில் 16,000க்கும் மேற்பட்டவர்களுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இது கிருமிப் பரவல் தொடங்கியதில் இருந்து அங்கு பதிவான ஆக அதிக எண்ணிக்கையாகும்.
ஆஸ்திரேலியாவில் செவ்வாய்க்கிழமையன்று 11,300 பேர் தொற்றுக்கு ஆளான நிலையில், நேற்று முன்தினம் 18,300ஆக உயர்ந்
தது.

