பெய்ஜிங்: சீனாவின் தொழில் நகரமாக ஷியானில் 155 புதிய தொற்று சம்பவங்கள் பதிவாகின. இது இவ்வாண்டு சீன நகரங்களில் பதிவான ஆக அதிக எண்ணிக்கையாகும்.
தற்போதைய கிருமிப் பரவலின் முதல் தொற்று சம்பவம் அங்கு டிசம்பர் 9ஆம் தேதி கண்டறியப்பட்டது முதல் இதுவரை 1,100க்கும் அதிகமானோர் தொற்றுக்கு ஆளாகினர்.
மற்ற நாடுகளில் உள்ள கிருமித் தொற்று எண்ணிக்கையைக் காட்டிலும் இது குறைவு என்றாலும் கிருமிப் பரவலை முற்றிலும் துடைத்தொழிக்க போராடும் சீனா, அந்நகர மக்களை வீட்டிலேயே முடக்கியது.
இது மட்டுமல்லாமல், அப்பகுதியில் அடிக்கடி கிருமித்தொற்று பரிசோதனை மேற்கொண்டு வரும் அதிகாரிகள், நேற்று முதல் ஆறு சுற்று பரிசோதனையை நடத்தி வருகின்றனர்.
"கிருமித்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஷியான் நகரம் வாழ்வா, சாவா என்ற நிலையில் உள்ளது," என்று உள்ளூர் அதிகாரியான ஜாங் ஃபெங்கு சொன்னார்.
கிருமித்தொற்று பரிசோதனை மேற்கொள்வது, அதிகாரிகள் அனுமதியோடு அத்தியாவசிய பொருட்கள் வாங்குவது தவிர, வேறு எதற்காகவும் அந்நகர மக்கள் வெளியே செல்ல முடியாது.
அத்துடன் இந்த கட்டுப்பாடுகள் காரணமாக நிறுவனங்களில் ஆள் பற்றாக்குறையும் நிலவுகிறது.
இந்நிலையில், முடக்கநிலை நீடித்தால் தங்களது உற்பத்தி பாதிக்கும் என்று சாம்சங், மைக்ரோன் நிறுவனங்கள் கூறியுள்ளன.

