சிங்கப்பூரில் இப்போது நடப்பில் உள்ள கொவிட்-19 பாதுகாப்பு நிர்வாக விதிமுறைகள் வரும் சீனப் புத்தாண்டின்போதும் நீடிக்கும் என்று நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
அதிகரித்துவரும் ஓமிக்ரான் கிருமிப் பரவலைக் கருத்தில்கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வோங் கூறினார்.
வரும் பிப்ரவரி 1ஆம் தேதி சீனப் புத்தாண்டு கொண்டாப்படவிருக்கிறது.
கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து ஐந்து பேருக்குமேல் ஒன்றுகூடவும் உணவகங்களில் சேர்ந்து உண்ணவும் முடியாது என்ற விதி நடப்பில் இருக்கிறது.
கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் இன்றைய செய்தியாளர் சந்திப்பில், ஓமிக்ரான் அலை சீனப் புத்தாண்டிற்குமுன் கடந்துவிடும் எனத் தம்மால் நினைக்க முடியவில்லை என்று குழுவின் இணைத் தலைவரான திரு வோங் சொன்னார்.
"சீனப் புத்தாண்டு வேளையில் ஓமிக்ரான் பாதிப்பு அதிகமாகலாம். ஆகையால், அந்தச் சமயத்தில் கிருமி பல்கிப் பெருகும் நிகழ்ச்சிகள் இடம்பெறுவதை அனுமதிக்க முடியாது. அதனால், ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையிலும் சமூகப் பொறுப்புடனும் பாதுகாப்பு நிர்வாக விதிமுறைகளுக்கு இணங்கி நடப்பதைத் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்குமாறு ஊக்குவிக்கவும் வலியுறுத்தவும் விரும்புகிறோம்," என்று திரு வோங் பேசினார்.
கிளார்க் கீயில் நடந்த புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்வை, கிருமி பல்கிப் பெருகும் நிகழ்விற்கான ஓர் எடுத்துக்காட்டாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அப்பட்டமாக, ஏற்றுக்கொள்ளா வகையில் பாதுகாப்பு நிர்வாக விதிமுறைகள் மீறப்பட்ட அந்நிகழ்வு குறித்து அமலாக்க அமைப்புகள் விசாரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
நூற்றுக்கணக்கானோர் கூடி, புத்தாண்டை வரவேற்ற அந்நிகழ்வு, காணொளியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
"அது முன்னதாகவே ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி அல்ல என்பதை விசாரணைகள் காட்டுகின்றன. அந்தத் தருணத்தில் மக்கள் கூடத் தொடங்கியதால், நூற்றுக்கு மேற்பட்டோர் திரண்டுவிட்டனர். பலரும் பாதுகாப்பு நிர்வாக விதிமுறைகள் மீறியதைக் காண முடிந்தது," என்று திரு வோங் விளக்கினார்.
இன்னும் பெருந்தொற்றை எதிர்கொண்டு வரும் நிலையில், இத்தகைய செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கண்காணிப்புப் படக்கருவியில் பதிவான காணொளியின் மூலம் விதிமீறியோரை அடையாளம் காணும் பணி இடம்பெற்று வருகிறது என்றும் அமைச்சர் சொன்னார்.
அவர்களுக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டு, விதிமீறியோர்மீது அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

